districts

img

மானாமதுரை: பள்ளி மாணவரை தாக்கிய தலைமையாசிரியர் மீது புகார்  

மானாமதுரையில் பள்ளி மாணவரை மது போதையில் மம்பட்டி கட்டையால் தலைமையாசிரியர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை  ஒன்றியம் தெற்குசந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் என்ற மாணவர் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர் அறிவியல் ஆசிரியராகவும் உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது இந்த பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், வின்சென்ட் தலைமை ஆசிரியர் பணியிடத்தை பொறுப்பு பணியாக கவனித்து வருகிறார்.

ஆசிரியர் வின்சென்ட் மானாமதுரையில் தனியாக தங்கி வேலை பார்த்து வருவதால் பள்ளி மாணவர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பணி நேரத்திலும் மது போதையில் இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் புகார் அளித்தனர்.  

இந்நிலையில் ஆசிரியர் வின்சென்ட்டிடம் மாணவர் ரெங்கராஜன் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த வின்சென்ட், மம்பட்டி கட்டையால் மாணவர் ரெங்கராஜனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர் ரெங்கராஜனுக்கு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இச்சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் மாணவர்  சார்பில் புகார் செய்யப்பட்டது. காவல் சார்பு ஆய்வாளர் முகமது தாரிக்குல் அமீன்  கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு   நேரடியாக  வந்து விசாரணை நடத்தினார்.  

விசாரணையில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விட்டு வின்சென்ட் மது போதையில் பள்ளிக்கு வந்ததாக தெரிந்தது. மேலும் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து சார்பு ஆய்வாளரிடம் வின்சென்ட் மீது கொடுக்கப்பட்ட புகார்  குறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தலைமை ஆசிரியர் வின்சென்ட் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.

;