சென்னை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தனது பரவல் வேகத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனருகில் இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தற்பொழுது தமிழக உள்மாவட்டங்களிலும் தனது மிரட்டலை தொடங்கியுள்ளது.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் குறுகிய காலத்தில் பலத்த பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 60 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. 2,186 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 68,254 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 308 பேரும், செங்கல்பட்டில் 274 பேரும், திருவள்ளூரில் 209 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு 100-யை தாண்டியது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 73 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.