tamilnadu

img

தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்களை நசுக்காதே! சந்திரசேகரராவ் அரசுக்கு சிஐடியு எச்சரிக்கை

புதுதில்லி:
தெலுங்கானா மாநில அரசு, அம்மாநிலப் போக்குவரத்து ஊழியர்களை நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப் பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோரியுள்ளது.இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெலுங்கானாவில் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்றிட, மாநில அரசு உரியநடவடிக்கைகள் எடுக்க வேண்டும்என்று வலியுறுத்தி, மாநிலப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அக்டோபர் 5 ன்று தொடங்கிய வேலைநிறுத்தம் முழு வெற்றிகரமாக நடந்து வருகிறது.போக்குவரத்துக் கழகம் தற்சமயம் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு அரசு அளித்திடும் பல்வேறு மானியங்களும், நாளும் அதிகரித்திடும் டீசல் விலை உயர்வும், ஜிஎஸ்டி திணிக்கப்பட்டிருப்பதும் ஒருசில காரணிகளாகும். நிச்சயமாக போக்குவரத்து ஊழியர்கள் அல்ல. இவற்றைப்பற்றியெல்லாம் பரிசீலனை எதுவும் செய்திடாமல், மாநில அரசு, 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறது. மேலும் போக்குவரத்துக் கழகசங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கன்வீனர், வி. சீனிவாச ராவ்உட்பட இரண்டு கூட்டு கன்வீனர் களையும்,  தெலங்கானா மாநில சிஐடியுவின் நிர்வாகிகளையும் கைது செய்திருக்கிறது.  நட்டத்திற்கு ஊழியர்களே பொறுப்பு என்று கூறி முதல்வர், தனது எதேச்சாதிகார அணுகுமுறை யைக் காட்டிக் கொண்டிருக்கிறார். புதிய ஊழியர்களைத் நியமனம் செய்யப்போவதாகவும், அவ்வாறு புதிதாகச் சேர்கிறவர் கள் எந்தத் தொழிற்சங்கங்களிலும் சேரமாட்டோம் என்று எழுதித்தரவேண்டும் என்றும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு பலஅரசிடம் எழுப்பியிருந்த போதிலும், அவற்றுக்கு அரசு பலமுறை செவி சாய்க்க மறுத்ததன்காரணமாக, கூட்டு நடடிக் கைக் குழு செப்டம்பர் 6ஆம்தேதி வேலைநிறுத்த நோட்டீஸ்அளித்தது. தெலங்கானா மாநிலஅரசின் அலட்சிய மனப்பான்மை யின் காரணமாகவே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்தது.இத்தகைய மாநில அரசின் தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத அணுகுமுறையை சிஐடியு கடுமையாகக் கண்டிக்கிறது. டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைத்துஊழியர்களும் உடனடியாக மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். பிரச்சனைகள் குறித்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட முன்வர வேண்டும்.போராடும் தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு  ஆதரவாகக் குரல் கொடுத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் உள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களையும் சிஐடியு அறைகூவி  அழைக்கிறது. (ந.நி.)

;