tamilnadu

img

3 மணி நேரமாக கொள்ளிடம் ஆற்று நீரில் மிதந்த மூதாட்டி மீட்பு

சீர்காழி, ஏப்.7-கொள்ளிடம் ஆற்று நீரில்3 மணி நேரமாக மிதந்த மூதாட்டி. உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மிகவும் ஆழமான பகுதியில் ஒரு மூதாட்டியின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் நடுவில் நின்று பார்த்த போது, சுமார் 20 அடிக்கும் மேல் ஆழமான பகுதியில் தண்ணீரில் சுமார்80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மிதந்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர். சடலம் தானே என்று போலீசார் நிதானமாக அதை கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.அப்பகுதி மீனவர்களின் படகுடன் சென்று தண்ணீரில் மிதந்த மூதாட்டியை கரைக்கு கொண்டு வந்து படகை விட்டுஇறக்கி பார்த்த போது, அவர் கண் விழித்து பார்த்து கை கால்களையும் அசைத்தார். இதனை கண்ட போலீசாரும் அப்பகுதியில் உள்ளவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு மூதாட்டிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீரில் 3 மணி நேரத்திற்கு மேலாக சடலம் போல்மிதந்த மூதாட்டி உயிர் பிழைத்திருப்பது குறித்து போலீசார்மற்றும் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த மூதாட்டியார் தண்ணீரில் எப்படி விழுந்து மிதந்தார் என்பது குறித்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

;