tamilnadu

img

போராட்டம் தான் விடிவெள்ளி.. . அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆ.செல்வம் பேச்சு

தருமபுரி:
போராட்டம் தான் விடிவெள்ளி என அரசு  ஊழியர் சங்கத் தலைவர் ஆ.செல்வம் கூறினார்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநித்துவ பேரவை வெள்ளியன்று தருமபுரி கேபிஜே தங்கமணி மாஹாலில் துவங்கியது. மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்ககொடியை சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் ஏற்றிவைத்தார். அரசு ஊழியர் சங்க கொடியை, அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் (பொ) ஆ.செல்வம் ஏற்றிவைத்தார். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன கொடியை, அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஏற்றிவைத்தார். அரசுஊழியர் சங்க மாவட்டத் தலைவரும், வரவேற்புக்குழு தலைவருமான எம்.சுருளிநாதன் வரவேற்றார்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் இரா.நூர்ஜஹான், மாநிலப்பொருளாளர் பே.பேயதேவன் ஆகியோர் அறிக்கையை முன் வைத்தபேசினர். 

முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் (பொ) ஆ.செல்வம் பேரவையை துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தொடர் போராட்டம் நடத்தி பல்வேறு உரிமைகளையும், கோரிக்கைகளையும் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் காலமுறை ஊதியம் மட்டும் எட்டாக்கனியாக உள்ளது. தமிழக அரசு கடந்த 38  ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்களின் உழைப்பை சுரண்டி வருகிறது. பணியில் இருந்து ஓய்வுபெற்றால் வெறும் ரூ.2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்குகிறது. உயர்ந்துகொண்டே இருக்கிற விலைவாசியில் எப்படி இதைவைத்து பிழைக்கமுடியும் என கேள்வி எழுப்பினார். 240  நாட்கள் பணிசெய்தால் நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருக்கிறது. சத்துணவு ஊழியர்கள் 35 ஆண்டுகளுக்கு மேல்பணியாற்றினாலும் சமூகப் பாதுகாப்பான ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது.

தமிழகத்தில் 4 லட்சம் பேர் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த முறையிலும், அவுட்சோர்சிங் முறையிலும் தமிழக அரசு பணியமர்த்துகிறது. மாணவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகாக போராடினால் அரசு காவல்துறையின் மூலம் ஒடுக்குகிறது. 73 ஆண்டு கால இந்திய சுதந்திரவரலாற்றில் நடக்காத சம்பவங்கள் தற்போது நடந்து வருகிறது. இந்தியாவையை திரும்பி பார்க்கவைக்கும் அளவிற்கு200 அமைப்புகளை ஒருங்கிணைத்து ஜாக்டோ-ஜியோ வலுமிக்க போராட்டத்தை நடத்தியது. இதில் சத்துணவு ஊழியர்களின் 9 கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  ஆகவே, இதனை ஜனநாயக முறைப்படி சந்திப்போம்.தமிழகத்தில் அரசுத்துறையில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது. 1 கோடி பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். துவக்கப் பள்ளிகளை மூடும் அரசாணை 145 ஐ அறிவித்துள்ளது. மேலும்வேலை பறிக்கிற 56 அரசாணையும் அறிவித்துள்ளது. ஆகவேநம் உரிமைகளையும் கோரிக்கைகளை வெல்ல போராட்டம்தான் விடிவெள்ளி. எனவே தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.பாரி பேசுகையில், தமிழகத்தில் காமராசர் கிராமந்தோறும் கல்விக்கூடங்களை திறந்தார். இதற்கு மாறாக தற்போது உள்ளஅரசு 1 லட்சத்து 50 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளை மூடவேண்டும் என முடிவெடுக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால் இட ஒதுக்கீடுமறுக்கப்படும். 3ஆம் வகுப்பிலிருந்து பொதுத்தேர்வு, உலக அளவில் கல்வியை தனியாருக்கு கொடுக்கப்படும். இப்படி பலமோசமான சரத்துகளை உள்ளடக்கி தேசிய கல்விக்கொள்கை உள்ளது. 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலபொதுச்செயலாளர் சு.பார்த்திபன் பேசுகையில், கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக முதல்வர் 31 ஆயிரம் போராட்டங்களை எதிர்கொண்டு அனுமதியளித்ததாக கூறுகிறார். நடிகர்களைசந்திக்கும் தமிழக முதல்வர் கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை சந்திக்க மறுக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.வெங்கட்டேசன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலபொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி,அரசு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் ஏ.சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் நன்றி  கூறினார்.

;