tamilnadu

img

ஆக்சிஸ் வங்கி நெருக்கடியால் விவசாயி தற்கொலை.... விவசாயிகள் போராட்டத்தால் கடன் தள்ளுபடி

தாராபுரம்:
தாராபுரம் ஆக்சிஸ் வங்கி நெருக்கடியால் விவசாயி தற்கொலை கொண்ட நிலையில், நீதி கேட்டு விவசாயிகள் நடத்திய ஆவேச போராட்டத்தால் விவசாயி வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயிராஜாமணி (55). இவர் குடும்பத்தோடுவிவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் விவசாய தேவைகளுக்காக தாராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் கடன் பெற்றிருந்தார். கொரோனா நோய் தொற்று காரணமாக விளைபொருட்களை விற்க முடியாததால் கடன் தவணை தொகையை கட்டமுடியாமல் நெருக்கடியில் இருந்துவந்துள்ளார். இதற்கிடையில் ஆக்சிஸ் வங்கி சார்பில் கடன்வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட நபர்களுடன் வங்கி மேலாளர் விவசாயி ராஜாமணியின் தோட்டத்திற்கு சென்று தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி ராஜாமணி சில தினங்களுக்கு முன்பு பூச்சிமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில் ராஜாமணியின் இறப்புக்கு நீதிகேட்டு கடந்த ஜீலை 8 ஆம் தேதியன்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து திங்களன்றுகாலை வட்டாட்சியர் அலுவல கத்தில் வங்கி நிர்வாகம், விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிக விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் திங்களன்று தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கனகராஜ் தலைமை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிராஜாமணி ஆக்சிஸ் வங்கியில் பெற்றிருந்த கடன் மற்றும் வட்டிதொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு ஆவணங்கள் மற்றும்தடையில்லா சான்று ஆகியன 15 நாட்களுக்குள் அவரது குடும்பஉறுப்பினர்களிடம் ஒப்படைக்கப் படும். ராஜாமணியின் இறப்பிற்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான மனு தாராபுரம் வட்டாட்சியர் மூலமாக ஆக்சிஸ் வங்கி மேலதிகாரி களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி கள் வங்கிகள் இடையேயான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாய சங்கங்களை உள்ளடக்கிய குழுஏற்படுத்த பரிந்துரை செய்யப்படும்.

ராஜாமணியின் இறப்புக்கு காரண மான வங்கி ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது குறித்தும், இழப்பீடு குறித்த மனு மீது மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்தம் தகவல் தெரிந்தபின்னர் முடிவு செய்யப்படும். ராஜாமணியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வங்கியில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வேலைவாய்ப்பு பெறவிருப்பமில்லை என குடும்ப உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக, இந்த பேச்சு வார்தையில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தாராபுரம் தாலுகா தலைவர் ஆர்.வெங்கட்ராமன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சண்முகசுந்தரம், முத்துவிஸ்வ நாதன், வழக்கறிஞர் ஈசன், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, சிவக்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் முருகானந்தம், உழவர் உழைப்பாளர் கட்சி திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமுர்த்தி மற்றும் வங்கி நிர்வாகம், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;