tamilnadu

img

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்ட கதி மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படலாம்

சென்னை:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்ட நிலைமை எந்த ஒரு மாநிலத்திற்கும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எச்சரித்தார்.

சென்னையில் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று (செப்.26) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் ஏனைய பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதைநாடு பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில்உள்நாட்டிலேயே மக்கள் அகதிகளாக்கப்படுகின்றனர். நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் இதர சுயேட்சையான செயல்பாடுகளை கொண்டஅமைப்புகளில் அரசின் தலையீடு அதிகரித்துள்ளது. தனி நபர்களின் சிவில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, சில இடங்களில் பறிக்கப்பட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள்மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம்
மோடி அரசாங்கத்தின் கொள்கையால் ஏற்பட்டுள்ளது பொருளாதார  மந்த நிலை அல்ல.பொருளாதார நெருக்கடி. இதற்கு தீர்வு காணஅரசிடம் எந்த தீர்வும் இல்லை.அரசே ஏற்படுத்திய இந்த நெருக்கடிக்கு அரசேதீர்வு காணாவிட்டால் அது நமது பொருளாதாரத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரதமர் மோடி, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். மோடி பிரச்சாரம் செய்தமறுநாளே டிரம்ப்மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தலைவர்ஒருவர் அந்நாட்டின் தேர்தலில் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவேமோடியின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டதற்காக டிரம்ப் மீது அமெரிக்க செனட் சபையில்சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஜனநாயக நடைமுறைகளை மீறுவது, மக்களிடம் நிறவெறி அடிப்படையில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவது, தங்களது அரசியல்ஆதாயத்திற்காக  வன்முறையை தூண்டிவிடுவது ஆகியவற்றில் மோடிக்கும் டிரம்ப்புக்கும் நல்ல ஒற்றுமை உள்ளது.எனவே தான் அவர்கள்ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பாராட்டிக்கொள்கிறார்கள்.இந்தியாவில் எந்த ஒரு வெளிநாட்டவரும் வந்து பிரச்சாரம் செய்யமுடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. கடந்த மக்களவைத்தேர்தலின் போது மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குபிரபல வங்கதேச நடிகர் பிரச்சாரம் செய்ய வந்தபோது மோடி அரசால்  திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் ஒருநாட்டின் பிரதமரே விதிமுறைகளை மீறி அந்நிய நாட்டு தலைவருக்கு தேர்தல்பிரச்சாரம் செய்கிறார். இதை ஒருபோதும்ஏற்கமுடியாது. மக்கள் இன்று சந்தித்துக்கொண்டிருக்கக்கூடிய துயரமான நிலைக்கு தீர்வு காணாமல் சர்வதேச அளவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியில் மோடி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டில் ஏற்பட்டுள்ளபொருளாதார நெருக்கடிக்கு அரசிடம் என்ன தீர்வு  உள்ளது என்று நாட்டுமக்கள் கேள்வி எழுப்பவேண்டும்.

கடைந்தெடுத்த பொய்
நாட்டில் உள்ள அனைவரும் சமம். யாருக்கும் சிறப்பு உரிமை இல்லை; எனவேதான் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டோம் என்று ஆளும் பாஜகவினர் கூறுவது முற்றிலும் கடைந்தெடுத்த பொய்யாகும். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு மட்டும் இந்தியாவில் இல்லை.இந்திய அரசியல் சாசனத்தில் 371வது பிரிவில் ஏ முதல் ஐ வரை உள்ள பல்வேறுபிரிவுகள் இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், மகாரஷ்டிரா,குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதை மறைத்துவிட்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு சலுகைவழங்கப்பட்டுள்ளதைப் போல் பொய்யான பிரச்சாரத்தை பாஜகவினர் செய்து வருகிறார்கள்.இனி எந்த ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஜம்மு - காஷ்மீரில் நிலம் வாங்கலாம், காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பேசி வருகிறார்கள். முதலில் உங்களை காஷ்மீரி பெண்கள் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் பாஜகவினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாடே இன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று பாஜகஆளும் உத்தர்கண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் யாரும் நிலம் வாங்கிவிடமுடியாது. வடகிழக்கில்பெரும்பாலான மாநிலங்களில் இன்றும் நீங்கள் நிலத்தை வாங்கமுடியாது. பழங்குடியினர் நிலம்  என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் வெளியாட்கள் நிலத்தை வாங்க முடியாது. ஆனால் ஜம்மு - காஷ்மீரில் மட்டும் தான் யாருமே நிலம் வாங்க முடியாது என்ற நிலை இருந்ததுபோல சித்தரிக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துயூனியன் பிரதேசங்களாக மாற்றியது நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சிக் கொள்கையின் மீது நடத்தப்பட்ட கொடுரமான தாக்குதல் ஆகும்.
நாளை எந்த ஒரு மாநிலத்திற்கும் இந்த கதி ஏற்படலாம். பாஜக ஆட்சியில் இல்லாத எந்த மாநிலமும் நாளை மத்திய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு மாநில சட்டப்பேரவையை கலைத்துவிட்டு, ஆளுநரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க முடியும். பின்னர் சட்டப் பேரவையை நீக்கிவிட்டு பல யூனியன் பிரதேசங்களாக மாநிலத்தை சிதைக்க முடியும். தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றலாத்தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்தை கூட தனி யூனியன் பிரதேசமாக மாற்றி, இனி நீங்கள் எல்லாம் தமிழக அரசிடம் செல்லவேண்டாம்; மத்தியஅரசிடம் செல்லுங்கள் என்று அம்மாவட்ட மக்களிடம் சொல்ல மாட்டார்கள் என்று நிச்சயம் இல்லை. இந்த துணிச்சல். நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகளை அவர்கள் குறைத்து மதிப்பிடுவதில் இருந்து வருகிறது.

தீவிரவாதத்தை எதிர்ப்பது செங்கொடியே!
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றும் ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். உண்மையில் மோடி அரசின் முதல் 5 ஆண்டில்தான் காஷ்மீரில் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.இதற்கான புள்ளிவிவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை எதிர்த்து மோடி அரசு போராடவில்லை. அங்குள்ளசெங்கொடி இயக்கம்தான் உண்மையில் போராடிவருகிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒரு ஆர்எஸ்எஸ் பெயரை சொல்லமுடியுமா? பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் தீவிரமாக இருந்தபோது அவர்களால் படுகொலை செய்யப்பட்ட ஒரு பாஜகதலைவர் பெயரை சொல்லமுடியுமா? அதேபோல் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஒரு பாஜகவினரை காட்டமுடியுமா? யாரும் இல்லை. ஆனால் இன்று நீங்கள்அந்தமான் நிகோபாரில் உள்ள செல்லூலார்சிறைக்கு சென்றால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகளின் பட்டியலை காணமுடியும். ஆனால் 75 சதவீதத்தினர் கம்யூனிஸ்ட் பாரம்பரியம் கொண்டவர்கள். அவர்களில் பலர் சுதந்திரத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டு நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் பணியாற்றி  வாழ்ந்து மறைந்தார்கள். ஒரேஒருவரை ஆர்எஸ்எஸ்- பிஜேபியினர் அடிக்கடி கூறுவார்கள். அவர் சாவர்க்கர். அவர் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பிரிட்டிஷ்ஆட்சியாளர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்துவிட்டு சரணடைந்து விடுதலையானவர். இதுதான் வரலாறு. அப்படிப்பட்டவர்களின் அடிச்சுவட்டில் வந்தவர்கள் தான் இன்று காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சொல்கிறார்கள்.

அசாமில் நடப்பது என்ன?
வடகிழக்கு மாநிலத்தில் இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது? தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மக்களை அரசு சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது.அசாம் மாநிலத்தில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டபின்னர் 20லட்சம் பேர் அதில் விடுபட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் அசாமில்பிறந்தவர்கள். பல தலைமுறைகளாக அந்தமாநிலத்தில் வாழ்ந்தவர்கள்கூட அந்த பட்டியலில் விடுபட்டுள்ளனர். இவர்கள் மிகவும் மனித தன்மையற்ற முறையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இப்போது இந்தகுடிமக்கள் பதிவேடு முறையை நாடுமுழுவதும் விரிவாக்கப் போவதாக பாஜக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.சிறுபான்மை மக்களை அவர்கள் குறிவைத்து தாக்குதல் தொடுக்கிறார்கள். மும்பையிலும் இதுபோன்ற தனிமுகாம்களை அமைக்கப்போவதாக கூறுகிறார்கள். இவை அனைத்தும் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைத்துவிடும். ஏற்கனவே நாகாலாந்தில் செயல்படும் நாகா விடுதலை முன்னணிஎன்ற பிரிவினைவாத அமைப்பு நாங்கள் எப்போதும் இந்தியாவில் இல்லை; இனி இருக்கப்போவதும் இல்லை என்று கூறி விட்டது.

மக்களிடம் இத்தகைய வெறுப்புணர்வை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வருதற்கு எதிராகநாம் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டியகடமை இருக்கிறது. இல்லையென்றால் இந்தஆட்சியாளர்களிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கமுடியாது. அப்படி பாதுகாத்தால்தான் நாம் நினைக்கும் சிறந்த இந்தியாவை உருவாக்கமுடியும்.இவ்வாறு யெச்சூரி பேசினார். அவரது ஆங்கில உரையை  ரமேஷ் தமிழில் மொழிபெயர்த்தார்.

;