tamilnadu

ஏப். 19ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சென்னை, ஏப்.16-தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப் பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப் பெண் பட்டியலும் தயாராகி வருகிறது.இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியன்று வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. திட்டமிட்டபடி 19 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு குருந்தகடு (சிடி) ஆகவோ, கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து பள்ளிகளுக்கும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், பத்திரிகை, செய்தி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.


அந்த முறையை இந்த வருடமும் பின்பற்றி தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. அதேபோல மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படுகிறது.இதனால் பள்ளிகளோ, மாணவர்களோ தேர்வு முடிவை தெரிந்துகொள்ள கல்வி அலுவலகங்களுக்கு செல்லத் தேவையில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை மதிப்பெண், ரேங்க் வாரியாக தெரிவிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டது.இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறுகையில், “தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பேட்டியோ, அறிவிப்போ வெளியிட இயலாது. பத்திரிகை, டிவி செய்தி நிறுவனங்களுக்கும் இணைய தளம் வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். அதனால் யாரும் நேரில் வரத்தேவையில்லை” என்றார்.

;