ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த ரயில் விபத்து குறித்து பொய்யான தகவலை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார் என்பது அம்பலமாகியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 29-ம் தேதி ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது அந்த வழியாக வந்த பலசா விரைவு ரயில், மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு லோக்கோ பைலட்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதை அடுத்து, ரயில் விபத்துக்கான காரணமாக, “ரயிலை இயக்கிய இரு லோக்கோ பைலட்களும் செல்போனில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இயக்கியதுதான்” என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம், விபத்தில் உயிரிழந்த லோக்கோ பைலட்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில், அவர் செல்போனில் கிரிக்கெட் பார்க்கவில்லை என தெரியவந்துள்ளது. இதன் மூலம், ரயில் விபத்து குறித்து பொய்யான தகவலை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார் என்பது அம்பலமாகியுள்ளது.