புதுதில்லி, மே 3 - இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் அதுல் குமார் அஞ்சான் அவர்கள்(61) காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த தோழர் அதுல்குமார் அஞ்சான் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தோழர் அதுல் குமார் அஞ்சான், லக்னோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆவேசமிக்க மாணவர் தலைவராக உருவாகி கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் வந்தவர்; லக்னோ பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராகவும், அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசிய தலைவராகவும் செயலாற்றியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் இயக்க பொதுச் செயலாளராக பணியாற்றிய இவர், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷனில் இடம்பெற்று மிக முக்கிய பங்களிப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.