districts

img

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - காவல்துறை விசாரணை

கோவை கருமத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் உஷா தம்பதியினரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தவர் கல்லூரி மாணவி பவித்ரா. இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கல்லூரி தேர்வு மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு சில பாடங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த மாணவி பவித்ரா மன உளைச்சலிலிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தன்னுடன் தங்கியுள்ள சக மாணவிகளிடம் கல்லூரிக்கு வர விருப்பம் இல்லை எனக் கூறி விடுப்பு விண்ணப்பத்தைக் கொடுத்து அனுப்பி உள்ளார். மாணவி பவித்ரா அனுமதி பெறாமல் விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பியது குறித்து விடுதி காப்பாளரிடம், கல்லூரி நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து விடுதி காப்பாளர் மாணவி பவித்ராவின் அறைக்குச் சென்று பார்த்த பொழுது அவர், தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். அதிர்ச்சியடைந்த விடுதிக்காப்பாளர், கல்லூரி நிர்வாகம் மூலம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;