tamilnadu

மலைவாழ் மக்கள் சங்க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு... கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட 6 ஊராட்சி மன்றங்களில் தலைவர் பதவிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மணி(இருமரம் ஊராட்சி), ராஜாராம்(மங்கநல்லூர்), வெங்கடேசன்(வடகம்பட்டு), வள்ளியம்மாள்(காளசமுத்திரம்), மஞ்சுகளா(எறும்பூர்), விஜயா(மழுவங்கரணை) ஆகியோர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, முருகமங்கலம் எனும் ஊராட்சியில், அது பொது இடம் என்ற போதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வாசுகி மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. எனவே அவரும் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மலைவாழ் மக்கள் சங்க வேட்பாளர்கள், பழங்குடி கிராமங்களில் மகத்தான வெற்றிபெற்றிருப்பது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் பழங்குடி மக்களுக்காக நடத்தி வரும் போராட்டங்களுடன் அம்மக்கள் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கிறார்கள் என்பதற்கு சான்றாகும்.இத்தகைய மகத்தான வெற்றியை அளித்த கிராம மக்களுக்கும்வெற்றிபெற்ற தோழர்களுக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

=====கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)====
;