tamilnadu

img

அக்னி ஆற்று மணல் அரிப்பு இடத்தில் சங்க கால தாய் தெய்வ சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பூவானம் கிராமத்தின் பூவனேசுவரர் சிவன் ஆலயத்தின் அருகே, அக்னியாற்றின் மணல் அரிக்கப்பட்ட இடத்தில் சுடுமண் சிற்பம் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கட்டையன்காட்டைச்சேர்ந்த வீரமணி என்பவரால் இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் பத்திரிகையாளர் பகத்சிங்மூலமாக, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிய வந் துள்ளது. இது குறித்து ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது:

“அக்னி ஆறானது மிகப்பழமையான பண்பாட்டு தொடர்ச்சி கொண்டது என்பதற்கு சான்றாக இதன் கரையோரப்பகுதிகளில் பல இடங்களில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பெருங்கற்கால சின்னங்கள், தாழி அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த ஆற்றின் மணலின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தசுடுமண் உருவம், ஏற்கனவே பலஅகழ்வாய்வுகளிலும் கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்களோடு ஒத்துப் போவதன் மூலம் இதனை சங்ககால பண்பாட்டு அடையாளமாக கருதலாம்,

சுடுமண் சிற்பம்
சுடுமண் உருவம் 16 சென்டிமீட்டர் உயரமும் 8 சென்டிமீட்டர் அகலமும் கொண்டுள்ள கையடக்க சிற்பமாக உள்ளது. இதன் முழு உடற்பகுதி ஆங்காங்கே சிதைவுற்றிருந்தாலும் முகவுறுப்புகளான கண், மூக்கு, வாய்பிரித்தறியும் வகையிலும், சிகையமைப்பு நேர்த்தியாக தெளிவான, மூன்றுஅடுக்குகளுடன் விசிறி போன்றும், இருநீண்ட காதுகளும் அதன் துளையுடைய மடல்கள் தோள்பட்டை வரை காதணியுடன் தொங்குவதாகவும், கழுத்தில் இரண்டு கழுத்தணிகளும் தெளிவற்ற நிலையில் காட்டப்பட் டுள்ளது.மார்புப் பகுதி உடையின்றியும், இரண்டு கைகளும் வெளிநோக்கிமடக்கியவாறு உள்ளங்கைகளை மூடியநிலையில் அமைக்கப்பட்டுள் ளது. வயிற்றுப் பகுதியில் தொப்புள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் வளைய வடிவில் இடுப்பணி காட்டப்பட்டுள்ளது. தொடைப் பகுதிகள் இரண்டும் அகன்ற நிலையில் காலை மடக்கியவாறு அமர்ந்தநிலையில் சிற்பம் உருவாக்கப்பட் டுள்ளது.கை கால் இரண்டும் உடமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல் குள்ளத் தன்மையுடன் காட்டப்பட்டுள்ளது.பெண்ணுருவம் போன்ற தோற்றம் காணப்பட்டாலும் மார்புப்பகுதியில் மாறுபாடு காட்டப்படவில்லை. எனவேஇது பெண் சிறுமியின் உருவமாக கொள்ளலாம், எனினும் நீண்ட தொங்கிய காதமைப்பு மூத்தவர் களுக்கே அமையும் என்பதால் இதனைசாதாரண பெண்மணி சிற்பமாக கருதவியலாது.எனவே பேரூர் , போளுவாம்பட்டி,திருக்காம்புலியூர், தொப்பூர் (கல் உருவம்) உள்ளிட்ட ஊர்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும் பூம்புகார் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளில் பதிக்கப்பட்ட தாய் தெய்வ சுடுமண் உருவங்கள் அடிப்படையிலும், இச்சுடுமண் சிற்பத்தையும் தாய்தெய்வ வழிபாட்டிற்கான வழிபாட்டுகுறியீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பழமையான சுடுமண் சிற்பங்களுடன் ஒப்பீடு
பாகிஸ்தானின் மொகஞ்சதாரோ, சிந்து சமவெளி, பாண்டிச்சேரி மாநிலம்அரிக்கமேடு, கீழடி, நாகப்பட்டினம் மாவட்டம் நாங்கூர் உள்ளிட்ட அகழ் வாய்வுகளில் கிடைத்த சுடுமண் சிற்பங்களுடன் ஓரளவு உருவ ஒற்றுமையுடனும், ஆந்திர மாநிலம் நெல்லூர்மாவட்டம், ஸ்வர்ண முக்தி ஆற்றுப்படுகை கோட்டிப்ரொலு அகழ்வாய் வில் கிடைத்த சுடுமண் சிற்பத்தின் அனைத்து தோற்ற அமைப்புகளும், சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பாலுள்ள அக்னி ஆற்று படுகையில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பத்துடன் ஒத்துக் காணப்படுவது வியப்பாக உள்ளது. ஒப்பீடுகளின் அடிப்படையில் இந்த சிற்பம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்
கற்காலத்தைச் சேர்ந்தது என கருத முடிகிறது” என்றார்.

பொதுமக்கள் கோரிக்கை
கட்டையன்காட்டில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பத்தை பத்திரப்படுத்தி, இதனை முழு ஆய்வு செய்து தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டை அறிந்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;