tamilnadu

img

முன்னாள் நீதிபதி கர்ணன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மூத்த பெண் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்....

சென்னை:
பெண் நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மூத்த பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ். கர்ணன், அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது குற்றச் சாட்டுகள் சுமத்தியதால், கொல்கத்தா உயர் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டார்.இதனை தொடர்ந்து, நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தியதோடு, தலித் என்பதால் தன்னைப் பாரபட்சமாக நடத்துவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதே கர்ணன் குற்றச்சாட்டுகள் சுமத்தினார்.

தன் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதும் குற்றச் சாட்டுகளை நீதிபதி கர்ணன் முன் வைத்தார். இதனால் அவருக்கு மனநல பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.தனக்கெதிரான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தானே தடை உத்தரவு பிறப்பித்தும், 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தனக்கு முன்னால் ஆஜராகும்படியும், நீதிபதிகள் நியமன ஊழல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக, தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்த உச்ச நீதிமன்றம், கடந்த 2017 மே 9 ஆம் தேதி, நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப் பட்ட கர்ணன், தனது ஓய்வுக்குப் பிறகு, 6 மாத சிறை தண்டனை முடிந்து கடந்த 2017 டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில், சமூக வலைதளங்களில் முன்னாள் நீதிபதிகள் மற்றும் தற்போதைய உச்ச 
நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கடந்த 22 ஆம் தேதி வீடியோ ஒன்றை நீதிபதி கர்ணன் வெளியிட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் ஹென்றி டிபேன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதிகளின் பெயர்களைக் கூறி குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மீது தேசிய மகளிர் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களான வைகை, சுதா ராமலிங்கம், அன்னா மேத்யூ, நாகசைலா, கீதா உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண் நீதிபதிகளின் கண்ணியத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.வீடியோ பதிவை நீக்க உத்தரவிட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி இல்லத்துக்கு முன்பாக, முன்னாள் நீதிபதி கர்ணனின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதிபதிகள் மீதும், நீதிமன்றத்தின் மீதும் அவதூறுகளை பரப்பும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

;