tamilnadu

img

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி: தேர்வுத்துறை

சென்னை:
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பொதுத்தேர்வும் ரத்து செய்யப் பட்டுள்ளது.மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப் பெண்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேடுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன.இதற்காக மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனுப் பும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாலும், சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பதாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதேபோல் 11ஆம் வகுப்பிலும் வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும்புவியியல் பாடங்களில், காலாண்டு அரையாண்டில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி என அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கும்படி மாவட்ட முன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அவசர அவசரமாக மீண்டும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுத வைத்து, விருப்பம்போல மதிப்பெண்களை வழங்கி, விடைத்தாள்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி அருகே விடைத்தாள் மாயமானதால் மீண்டும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மாணவியர்கள் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு அருகே உள்ள டியூசன் சென்டரில் வைத்து 10 ஆம் வகுப்பு தமிழ், மற்றும் அறிவியல் தேர்வை ஆசிரியர்கள் முன்னிலையில் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

;