tamilnadu

img

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை:

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர். சமூக விரோதக் கும்பல்களின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பல பகுதிகளில் திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு காவிச் சாயம் பூசுவது, சேதப்படுத்துவது, இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் மதவெறி சக்திகளும், இந்துத்துவ வெறியர்களும் தங்களது அரசியல் லாபத்திற்காக அவர்களது தலைவர்களின் ஆசியுடன் செய்து வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்ற அவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் இழிவுபடுத்திய சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது  என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

;