tamilnadu

img

சுந்தரவள்ளி மீது  அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க

சென்னை:
பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமுஎகச மாநில துணைச் செயலாளரும், சமூக செயற்பாட்டாளருமான பேராசிரியர் சுந்தரவள்ளி மீது சமூக வலைத்தளங்களில் சில சமூக விரோத சக்திகள் தொடர்ந்து அருவருக்கத்தக்க, அநாகரீகமான பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெண்ணுரிமை சார்ந்தும், ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசி வருவதால் ஆத்திரமடைந்துள்ள மதவெறியர்கள் மற்றும் பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாதவர்களின் இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவதூறு செய்பவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

;