tamilnadu

img

விவசாயிகள், பொதுமக்களுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி செப்.25-ல் விவசாயிகள் சங்கம் மறியல்

சென்னை:
விவசாயிகள், பொதுமக்களுக்கு விரோதமான வகையில் நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி  செப்டம்பர் 25 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுளள அறிக்கை வருமாறு:

மத்திய பாஜக அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களையும் ஞாயிறன்று  நிறைவேற்றிவிட்டது. இந்த நாள் இந்திய விவசாயிகளை பொறுத்தவரை “கருப்பு ஞாயிறு” ஆக அமைந்துவிட்டது. இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்வித பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டு பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த மிக மிக மோசமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டத்திற்கு வக்காலத்து வாங்கி தமிழக முதலமைச்சர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததன் மூலம் அதிமுக, தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது.விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு செப்டம்பர் 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் மற்றும் சட்ட நகலெரிப்பு போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலைமறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை பங்கேற்கச் செய்யவும் முழுவீச்சில் செயல்படுவதென்று மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது.எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பாடம் புகட்டும் வகையிலும், மத்திய பாஜக அரசுக்கு தமிழகத்தின் ஒருமித்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையிலும் செப்டம்பர் 25 சாலை மறியல் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றியடையச் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;