tamilnadu

img

இந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் மறுப்பு: வங்கி மேலாளர் பணியிட மாற்றம்

இந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் வழங்க மறுப்பு தெரிவித்த வங்கி மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் மருத்துவர்  பாலசுப்பிரமணியன். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அடுத்த யுத்தப்பள்ளம் கிராமமாகும்.இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 15 வருடங்களாக வங்கி கணக்கு வைத்துள்ளார். 
இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்டகங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு சென்றுள்ளார்.  
வங்கியில் மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் நாராயண் காப்ளே என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரிடம் பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை  சமர்ப்பித்து  கடன் கேட்டு உள்ளார்.

அப்போது வங்கி மேலாளர், உங்களுக்கு இந்தி தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் எனக்கு இந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதற்கு வங்கி மேலாளர்,  நான் மகாராஷ்டிராவை சேர்ந்தவன். இந்தி தெரியும். இது மொழி பிரச்சனை என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவணங்களை காண்பித்து உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்தும், வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து  மருத்துவர், மொழி பிரச்னை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு, மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 12ம் தேதி  நோட்டீஸ் அனுப்பினார். மேலும் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் இந்தி தெரியாது என்பதால் கடன் கிடையாது என வங்கி மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக பாலசுப்பிரமணியன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் விஷால் நாராயண் காப்ளே திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 

;