tamilnadu

img

வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

சென்னை:
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இதற்கு துணைபோன ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 28 திங்களன்று தமிழகம் முழுவதும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் - குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் ‘சர்வாதிகார’மாக நடந்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் செப்டம்பர் 21 திங்களன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தோழமைக்கட்சிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.   விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் - கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

செப்டம்பர் 28 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் நகராட்சி  மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

;