tamilnadu

img

மருத்துவ ஆராய்ச்சிக்கான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு... அக். 28 வரை அரசுகளுக்கு அவகாசம்

சென்னை:
மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்த பிரதமர் அலுவலகச் செயலாளரின் பெயரை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், மனுவுக்குப் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அக்டோபர் 28 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் தாக்கல் செய்த மனுவில், இந்திய மருத்துவத் துறையை உலகத்தரத்திற்கு முன்னேற்றும்வகையில் எடுக்கும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதம், வங்கிகளின் கடுமையான நடைமுறைகள் ஆகியவைஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாமல் போவதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.பிரதமரின் ஆலோசனைப்படி, இந்த விவகாரத்தை நிதி ஆயோக்கின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகவும், இதுகுறித்து விவாதித்த நிதி ஆயோக், அரசு அமைப்புகளுக்குப் பல்வேறு பரிந்துரைகள் அனுப்பியுள்ளபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு எதிர்காலத்தில் இளம் விஞ்ஞானிகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று (செப். 22) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால், மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதேபோல, எதிர்மனுதாரராகச் சேர்க்கப் பட்டுள்ள பிரதமர் அலுவலகச் செயலாளரின் பெயரை நீக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, வழக்கில் பிரதமர் அலுவலகச் செயலாளரின் பெயரை நீக்கிய நீதிபதிகள், மத்திய - மாநில அரசுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், நிதி ஆயோக் ஆகியவை வழக்கில் பதிலளிக்க அக்டோபர் 28 வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

;