28,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகின் புகழ்மிக்க நிறுவனங்களில் ஒன்றான டிஸ்னி நிறுவனம், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் அந்நிறுவனத்தின் பார்க்குகள், ஹோட்டல்கள் மற்றும் கப்பல் வியாபாரங்களை எல்லாம் மூடி இருப்பதால், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சுமாராக 3.5 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்தின் 28,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 28,000 ஊழியர்களில் 67 சதவிகிதத்தினர் தற்காலிக பணியில் இருப்பவர்கள்.
மேலும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளவர்களில் பலருக்கு பகுதிநேர வேலையும், சிலர் தினசரி சம்பள ஊழியர்களாக வேலைசெய்ய அனுமதித்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டி அமாரோ கூறுகையில், சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால், குறிப்பிட்ட அளவு பணியாளர்களை மட்டுமே வைத்து இயக்கமுடியும். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் எடுக்கப்படும் கடினமான முடிவுகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பும்போது நிலைமைகள் சரிசெய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.