world

img

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஐ.நா இரங்கல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்தியப் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்  மறைவிற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் நாடு திரும்பி வரும் நிலையில், அங்கு தலீபான்களின் கை ஓங்கி வருகிறது. இந்நிலையில், காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன.

இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களைச் சேகரிக்கும் பணியில், ரேய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியப் புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக் ஈடுபட்டிருந்தார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி டேனிஷ் சித்திக் மற்றும் ஆப்கான் அதிகாரி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புகைப்பட பத்திரிகையாளர் சித்திக்கின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் ஊடகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதலால் பலியான சித்திக் மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், சித்திக் மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்தியுள்ளது.

;