மாஸ்கோ, பிப்.23- சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு பாரம்பரியமானது என்றும், எந்தவொரு மூன்றாவது நாட்டையும் குறிவைத்து ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும் சீனா கருத்து தெரிவித்துள்ளது. அண்மைக்காலத்தில் சீன-ரஷ்ய உறவு பலப்பட்டு வருகிறது. இருதரப்பு வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் வெடித்த பிறகு, ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக சீனா மாறியிருக்கிறது. ரஷ்யாவுடன் நல்ல உறவை வைத்துக் கொள்ளும் அதே வேளையில், உக்ரைனுடனான சச்சரவுக்கு ராணுவத் தீர்வு வேண்டாம் என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும் சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் விவகாரம் இன்னும் தீராத நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை சீனா அனுப்பினால் கடும் எதிர் விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா கூறியிருந்தது. அப்படியொரு நிலையே ஏற்படாத வேளையில், அமெரிக்காவின் இத்தகைய கருத்துகள் தேவையற்றவை என்று சீனா பதிலடி கொடுத்தது. முதலில் ஒரு சீனா கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா, தைவானுக்கு ஆயுதங்களைத் தருவதை நிறுத்தி வைக்கலாம் என்று சீன வெளியுறவுத்துறை குறிப்பிட்டது.
தங்கள் இரு நாடுகளின் உறவு எந்தவொரு மூன்றாவது நாட்டையும் குறிவைத்து உருவாக்கப்பட்டதல்ல என்று கருத்து தெரிவித்த வாங் யி, “இந்த இரு நாட்டு உறவில் வேறு எந்த மூன்றாவது நாடு தலையிடுவதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது. பரஸ்பர நன்மைக்காக உருவாக்கிக் கொண்டுள்ள இந்த உறவை மிரட்டல் மூலம் பிரிக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது” என்று குறிப்பிட்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் வெளியுறவு விவகார ஆணையத்தின் இயக்குநராக உள்ள வாங் யி, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்த வாங் யி, சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடந்த ஆண்டின் நிறைவுப்பகுதியில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் வீடியோ மூலம் பேசிக் கொண்ட அம்சங்களை வாங் யி நினைவு கூர்ந்தார். சர்வதேச நிலைமைகள் குறித்து சீனாவின் கருத்துக்களை புடினுடன் வாங் யி பரிமாறிக் கொண்டார். கடந்தகால அனுபவங்களின் பாடங்களுடன் உறுதியான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார அடித்தளத்தை இருநாட்டு உறவுகள் அமைத்துள்ளன என்றும் வாங் யி குறிப்பிட்டார். உறவை ஆழப்படுத்துவோம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, “உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளன. சர்வதேச அளவில் கூடுதல் ஜனநாயகத்திற்கும், அதை மேலும் பலப்படுத்துவதற்கும் இந்த உறவு பெரிய அளவில் உதவும். இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் நம்பகத்தன்மையை மேலும் ஆழப்படுத்துவோம். இரு நாடுகளின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நெருக்கடியும், குழப்பமும் அடிக்கடி எழுந்து வருகின்றன. இவற்றை எதிர்கொள்வதில் பெரும் அளவிலான ஒற்றுமையைக் கட்ட வேண்டியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் வாங் யி, “நெருக்கடியோடும், குழப்பத்தோடும் சவால்களும், வாய்ப்புகளும் சேர்ந்தே வருகின்றன. இதைத்தான் வரலாற்று இயக்கவியல் என்று நாம் சொல்கிறோம்” என்றார். சர்வதேச அளவிலான முக்கியமான பல பிரச்சனைகள் குறித்து புடினுடன் விவாதித்த இவர், இரு நாட்டுத் தலைவர்கள் மீண்டும் அமர்ந்து பேசுவதற்கான வாய்ப்பு பற்றியும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.