world

img

"நேட்டோவிலிருந்து வெளியேறலாம்" பிரான்ஸ் மக்கள் ஆவேசம்

ஐரோப்பிய நாடுகளில் பெரும் நெருக்கடியாக உருவாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வுக்குக் காரணமான அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பிரான்ஸ் மக்கள் கோரியுள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடியால், உக்ரைன் பக்கம் சாய்ந்து அந்நாட்டுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு தடைகளை உருவாக்கியது. அந்தத் தடைகளை ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்தப்படுத்தியது. அமெரிக்காவின் சொல்லை அப்படியே ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு தடைளை நடைமுறைப்படுத்தின. இந்தத் தடைகளால் ரஷ்யா பாதித்ததை விட, ஐரோப்பிய நாடுகள்தான் அதிகமாகப் பாதித்து வருகின்றன.

இப்படிப் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்த நாடான பிரான்சும் ஒன்றாகும். உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து எரிபொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வுக்கு எதிராகத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பணியாற்றுபவர்களும் இணைந்து கொண்டதால், எண்ணெய்ப் பற்றாக்குறை அதிகரித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் முன்பாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.

சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்களோடு உடனடியாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கோரியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் 15 நாட்களைத் தொட்டிருக்கிறது. பல்வேறு பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் எண்ணெய் தீர்ந்து விட்டது. ஆனால் வாகனங்களின் வரிசைகள் அப்படியே இருக்கின்றன. மூன்று நாட்கள் மட்டுமே நடப்பதாக இருந்த வேலை நிறுத்தம் தற்போது இரண்டு வாரங்களைத் தாண்டிவிட்டது.

வெறும் 20 விழுக்காடு பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில்தான் பிரச்சனை உள்ளது என்றும், எண்ணெய் விநியோகத்தில் சிரமங்கள் இல்லை என்றும் பிரான்சின் எரிபொருள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், 50 விழுக்காடு சுத்திகரிப்பு ஆலைகள் இயங்கவில்லை. இதனால் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் எண்ணெய் இல்லை. ஆனால், "பதட்டமடைய வேண்டாம்" என்று பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார்.

நேட்டோவே காரணம்

பிரான்ஸ் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு நேட்டோவே காரணமாகும். எனவே அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் பாரிசின் தெருக்களில் வலம் வந்தனர். போராடி வரும் தொழிலாளர்கள் மட்டுமில்லாமல், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். நேட்டோ உறுப்பினர் என்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பேரணியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மக்களின் ஆவேசத்தைக் கண்ட ஜனாதிபதி மக்ரோன், "போராடி வரும் எண்ணெய்த்துறைத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் தொடர்பான கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள்" என்று எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருத்தை தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், மக்களின் துயரம் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.