பாரீஸ், ஜூலை 8- பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நிறைவு பெற்று முடி வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடது சாரிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட ‘புதிய மக்கள் முன்னணி’ 182 இடங் களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆளும் என்செம்பில் (‘ஒன்றுசேர்ந்து’ என்று பொருள்) கட்சி 161 இடங்களுடன் இரண்டாவது இடத் திற்கு வந்துள்ளது. வெற்றிபெறுவார் கள் என்று மேற்கத்திய ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்ட அதிதீவிர வலது சாரிக் கட்சியான நேஷனல் ரேலி 142 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
திடீர் தேர்தல்
ஜூன் 9, 2024 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, பிரான்சில் ஐரோப்பிய நாடாளுமன்றத் திற்கான 81 இடங்களில் அதிதீவிர வலதுசாரிகளுக்கு 30 இடங்கள் கிடைத்தன. அக்கட்சிதான் முத லிடத்தையும் பிடித்தது. ஆளும் கட்சி மீதான அதிருப்திதான் அதி தீவிர வலது சாரிகளின் வெற்றிக்குக் காரணம் என்று கூறப்பட்டது. 2027 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர்கள் ஆட்சி யைப் பிடிப்பார்கள் என்றும் கருத்து கள் வெளியாகின. இந்நிலையில் தன்னிச்சையாக நாடாளு மன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்துவதற்கான அறிவிப் பை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்டார்.
பிற கட்சிகளை மட்டுமல்லாமல், அவரது கட்சிக்குள்ளும் இந்த திடீர் அறிவிப்பு ஆச்சரியப்படுத்தியது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு தேவையற்றது என்று அரசியல் வட்டா ரங்களில் கடும் விமர்சனமும் எழுந்தது. ஜூன் 30, 2024 அன்று முதல் சுற்றும் ஜூலை 7, 2024 அன்று இரண்டாவது சுற்றுமாக, நாடாளுமன்றத் தேர்தல், நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சா ரத்தில் முனைப்பாக இறங்கின.
மகிழ்ச்சியில் இருந்த அதிதீவிர வலதுசாரிகள்
திடீர் அறிவிப்பு என்றாலும், தங்கள் செல்வாக்கு வளர்ந்துள்ள நிலை யில் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விட முடியும் என்று தீவிர வலதுசாரிக் கட்சியான ‘நேஷனல் ரேலி’ கருதியது. ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்த லில் கிடைத்த வெற்றியால், தாங்கள் வெற்றி பெறக்கூடிய சக்தி என்று மக்க ளுக்கு அடையாளம் காட்டிவிட்டதாக அவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கி னர். பெரும்பான்மை கிடைக்காவிட்டா லும், தாங்கள்தான் முதலிடத்தைப் பெற வேண்டும் என்ற இலக்கோடு களத்திற்குத் தயாரானார்கள்.
ஆளும் ‘என்செம்பில் கட்சி’
இம்மானுவேல் மக்ரோன் தலைமை யிலான ஆளும்கட்சி, முன்கூட்டியே தேர்தலை நடத்துவதன் மூலம் இழப்பை சரிக்கட்டி விட முடியும் என்று நினைத்தது. கடந்த ஆண்டுகளில் நடை முறைப்படுத்தப்பட்ட ஆளும்கட்சியின் அதிதீவிர நவீன தாராளமயக் கொள்கைகள் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. எனவே, தீவிர வலதுசாரிகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று பெரும்பான்மை கருத்து நிலவுவதால் தான் மக்ரோன் 2022 ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.
புதிய இடதுசாரிக் கூட்டணி
இந்த நிலையில், ஜூன் 9, 2024 அன்று திடீர் தேர்தல் அறிவிப்பு வெளியான வுடனே, சோசலிஸ்ட் கட்சித் தரப்பில் ஒரு முயற்சி ஜூன் 10ஆம் தேதி யன்றே தொடங்கியது. இடதுசாரி இயக்கங்களில் பெரிய கட்சியான பிரான்ஸ் அன்போவ்ட் கட்சி (‘தலை வணங்கா பிரான்ஸ்’ என்று பொருள்) அடுத்த பெரிய கட்சியான சோசலிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, சூழலியல் கட்சி மற்றும் பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை ஒன்றிணைந்து, கூட்டுத் தலைமையில் செயல்பட்டு தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்தன.
முதல் சுற்றுத் தேர்தல்
மொத்தமுள்ள 577 தொகுதிகளில் 76 தொகுதிகளுக்கு நேரடியான தேர்தல் நடைபெறும். அந்தத் தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெறுபவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படு வார்கள். எஞ்சியுள்ள 501 தொகுதிகளில் 50 விழுக்காடு வாக்குகளை யாரும் தாண்டாத நிலையில், 12.5 விழுக்காடு பெற்ற அனைத்து வேட்பாளர்களும் இர ண்டாவது சுற்றில் போட்டியிடுவார்கள்.
அதன்படி ஜூன் 30, 2024 அன்று முதல் சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. நேரடியான தேர்தல் நடந்த 76 இடங் களில் தீவிர வலதுசாரிக்கட்சியான ‘நேஷனல் ரேலி’ 38 இடங்களிலும், இடதுசாரிகளின் புதிய மக்கள் கூட்டணி 32 இடங்களிலும், ஆளும் என்செம்பில் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. வாக்குகள் அடிப்படையில், தீவிர வலதுசாரிக் கட்சிக்கு 33.21 விழுக்காடு வாக்கு களும், இடதுசாரிகளின் புதிய மக்கள் கூட்டணிக்கு 28.21 விழுக்காடும், ஆளும் கட்சிக்கு 21.28 விழுக்காடும் கிடைத்தன. பெரும்பாலான தொகுதி களின் இரண்டாவது சுற்றுக்கு மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் தகுதி பெற்றனர்.
முதல் சுற்றில் தொகுதிவாரியான முன்னிலை நிலவரத்தின்படி, தீவிர வலதுசாரிக்கட்சி 297 தொகுதி களில் முன்னணியில் இருந்தது. இந்த எண்ணிக்கைப்படி பார்த்தால், பெரும்பான்மைக்குத் தேவையான 289 தொகுதிகளை அக்கட்சி பெற்று விடும். இரண்டாவது இடத்தில் இருந்த இடதுசாரிகளின் புதிய மக்கள் கூட்டணி 159 இடங்களிலும், ஆளும்கட்சி 70 இடங்களிலும் முன்னிலை வகித்தன. நேரடியாகத் தேர்வான 76 இடங்களில் தீவிர வலதுசாரிக்கட்சிக்கு சரிபாதி இடங்கள் கிடைத்திருந்தன.
இரண்டாம் சுற்று
இந்த நிலையில், 501 தொகுதிகளில் வேட்பாளர்கள் 50 விழுக்காட்டிற்கு மேல் பெறாததால், அவற்றிற்கு இரண்டாம் சுற்றுத் தேர்தல் ஜூலை 7, 2024 அன்று நடந்தது. இந்தத் தேர்தலிலும் வாக்கு களின் அடிப்படையில் தீவிர வலது சாரிக்கட்சியே 37.1 விழுக்காட்டுடன் முதலிடத்தைப் பெற்றது. ஆனால் 104 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 26.3 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த இடதுசாரிகளின் புதிய மக்கள் கூட்டணி 156 இடங்களையும், 24.7 விழுக்காட்டுடன் ஆளும் கட்சி 159 இடங்களையும் பிடித்தன. நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட தையும் சேர்த்தால் இடதுசாரிகளின் புதிய மக்கள் முன்னணிக்கு 188, ஆளும்கட்சிக்கு 161 மற்றும் அதிதீவிர வலதுசாரிக்கட்சிக்கு 142 இடங்கள் கிடைத்துள்ளன.
அதிதீவிர வலதுசாரிகள் தோற்றது எப்படி?
முதல் சுற்றில் தீவிர வலது சாரிகள் 297 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறார்கள் என்ற செய்தி ஜனநாயக, இடதுசாரி சக்திகளிடம் பெரும் அதிர்ச்சியையும் எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியது. 501 தொகுதிகளில் 306ல் மும்முனைப்போட்டி என்ற நிலை இருந்தது. தீவிர வலதுசாரிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க, ஒன்றிணைந்து நிற்பதே சரி என்று அறிவித்த இடதுசாரிகள், 134 தொகுதிகளில் இருந்து தங்கள் வேட்பாளர்களை விலக்கிக் கொண்டு இருமுனைப் போட்டியை உருவாக்கி, தற்போதைய ஆளுங்கட்சியை ஆதரித்தனர். ஆளும்கட்சியும் தனது பங்கிற்கு 82 வேட்பாளர்களை விலக்கிக் கொண்டு, வேறு வழியின்றி, இடதுசாரிகளை ஆதரித்தது.
இடதுசாரிகளின் ஒற்றுமை
தீவிர வலதுசாரிகளின் கைகளில் சிக்கிவிட்டதாக சொல்லப்பட்ட பிரான்ஸ் அரசியல், ஒரே மாதத்தில் இடதுபக்கம் திரும்பியிருக்கிறது. இடதுசாரிகளின் ஒற்றுமையே இதற்கான காரணமாக இருந்துள் ளது. கடந்த பத்தாண்டுகளில் பிரான்சில் இடதுசாரிகள் தொடர் வளர்ச்சியைக் கண்டுள்ளனர். 2017ல் நடந்த தேர்தலில் 57 தொகுதிகளில் வென்ற இடதுசாரிகள், 2022ல் 131ல் வெற்றி பெற்றனர். தற்போது 182 என்ற எண்ணிக்கையை எட்டி யிருக்கிறார்கள்.
“வலதுசாரிகளின் வளர்ச்சியைத் தடுக்க மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே வழி” என்று வெற்றியை இணைந்து கொண்டாடிய இடதுசாரிக் கட்சி களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
பாலஸ்தீனம் சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை புதிய மக்கள் கூட்டணி ஆதரிக்கிறது. பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 1,600 யூரோ, ஓய்வூதியத்திற்கான வயது வரம்பை மீண்டும் குறைக்க வேண்டும் மற்றும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலைகளுக்கு வரம்பு உள்ளிட்ட வற்றை இடதுசாரிகள் முன்னிறுத்தி யிருக்கிறார்கள். தங்களை ஆட்சிப் பொறுப்பேற்க உடனே அழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மக்ரோனிடம் புதிய மக்கள் கூட்டணி கோரியுள்ளது. 50 விழுக்காட்டிற்கும் மேலான பிரான்ஸ் மக்கள், தீவிர வலதுசாரிக் கொள்கைகளை நிரா கரித்திருக்கிறார்கள் என்பதே பிரான்ஸ் தேர்தல் சர்வதேச சமூகத் திற்குத் தந்துள்ள செய்தியாகும்.
- தொகுப்பு : கணேஷ்
பிரான்ஸ் நாடாளுமன்றம்
கூட்டணி இடங்கள்
இதர இடதுசாரிகள் 13
புதிய மக்கள் கூட்டணி (இடதுசாரி கட்சிகள்) 182
என்செம்பில் கூட்டணி 168
குடியரசு + வலதுசாரிகள் 60
நேசனல் ரேலி + கூட்டணி 143
இதரர் 11
பிரான்ஸ் தேர்தல் நடைமுறை என்ன?
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 தொகுதிகள் உள்ளன. நம் நாட்டில் நடப்பது போலவே அத்தனை தொகுதிகளிலும் பல கட்சிகளின் வேட்பாளர்கள் நிற்பார்கள். கூட்டணிகளும் இருக்கும். விகிதாச்சார முறைப்படியான தேர்தல் இங்கு நடைமுறையில் இல்லை. தொகுதிவாரியான தேர்தல் என்றாலும் நமது நாட்டில் உள்ள நடைமுறைக்கும், பிரான்சில் உள்ளதற்கும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
இரண்டு சுற்றுகளாகத் தேர்தல் நடைபெறுகிறது. 76 தொகுதிகளுக்கு நேரடித் தேர்தல், அதாவது முதல் சுற்றிலேயே யாருக்கு அதிகமான வாக்குகள் விழுகிறதோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள். எஞ்சியுள்ள 501 தொகுதிகளில், முதலிடம் பெற்றவருக்கு 60 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் கிடைத்திருந்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாருக்கும் 50 விழுக்காடு வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், 12.5 விழுக்காடு வாக்குகளுக்கு மேல் வாங்கிய வேட்பாளர்கள் அனைவரும் இரண்டாவது சுற்றில் போட்டியிடுவார்கள்.
இந்த சுற்றில் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விலகிக் கொள்ளலாம். இந்த உத்தியை இடதுசாரிகளின் புதிய மக்கள் முன்னணியும், ஆளும் என்செம்பில் கட்சியும் கடைப்பிடித்துதான் தீவிர வலதுசாரிகளைத் தோற்கடித்துள்ளனர். மும்முனைப் போட்டிகளை இருமுனைப் போட்டிகளாக மாற்றி, வாக்குகளை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.