பாகிஸ்தான் பெஷாவர் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 190 கீமி தொலைவில் அமைந்துள்ளது பெஷாவர் நகரம். கொச்சா ரிசல்டார் என்ற பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர் மேலும் 56 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்று பயணம் மேற்கொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் ராவல்பிண்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.