கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் காணாமல் போன பெண்ணின் எலும்புக்கூடு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் சுனாமியில் அடித்து செல்லப்பட்டனர்.
சுனாமி ஏற்பட்டு 10 ஆண்டுகள் ஆன போதிலும், தற்போது வரை 2500 பேர் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர். காணாமல் போனவர்களின் உடல்கள் கிடைக்காமலும், அவர்கள் குறித்த தகவல்களும் தெரியாமலும் ஏராளமான குடும்பங்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி மியாகி கடற்கரையோரத்தில் மனித எலும்புக் கூடு ஒன்றை உள்ளூர் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
அந்த எலும்புக் கூட்டை தடவியல் மற்றும் மரபணு சோதனை செய்ததில், அது சுனாமியில் அடித்து செல்லப்பட்ட 61 வயது மதிக்கத்தக்க பெண் நட்சுகோ ஒகுயாமாவின் எலும்புக்கூடு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒகுயாமாவின் எலும்புக் கூட்டை கண்டெடுத்தவருக்கு அவரது மகன் கண்ணீரூடன் நன்றி தெரிவித்தனர். சுனாமியின் 10 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதற்குள், எனது தாயின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டதை நினைத்து நான் நிம்மதி கொள்கிறேன் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.