டோக்கியோ, நவ.7- ஜப்பானின் உள்ளூர் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 11 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒருங்கிணைக்கப்பட்டாலும் வெற்றி கிட்டவில்லை. தேர்தல் நேரத்தின்போது முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் கொலை ஆளுங்கட்சிக்கு ஆதரவான அலையையும் உருவாக்கியது. தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அமெரிக்கப் படைத்தளங்கள் அமைப்பதில் சரணாகதி நிலை உள்ளிட்டவை குறித்து அதிருப்தி இருந்தபோதும் ஆளும் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலைத் தொடர்ந்து தற்போது சட்டமன்ற, நகரவை உள்ளிட்டவற்றில் வழக்கமான தேர்தல்கள் நடந்து வருகின்றன.
இந்தத் தேர்தல்களில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அக்கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். குறிப்பாக நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த ஒகினாவா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தின. அமெரிக்கப் படைத்தளங்களை முழுமையாக அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்த டென்னி தமாகி மீண்டும் அம்மாகாண ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டார். அண்மைக்காலத்தில் நடைபெற்று வரும் உள்ளூர் தேர்தல்களில் கூடுதல் வெற்றியையோ அல்லது ஏற்கனவே வெற்றி பெற்ற இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதையோ ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அடைந்து வருகிறது. அக்டோபர் 30-ஆம் தேதி நான்கு பெருநகரங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. சோசா நகர சட்டமன்றத்தில் ஏற்கனவே வைத்திருந்த இரண்டு இடங்களில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஹிமி நகரத்தில் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஆவோமோரியில் அபாரம்
ஆவோமோரி நகரத்தில் 35 இடங்கள் இருந்தன. அந்த இடங்களின் எண்ணிக்கை தற்போது 32 ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. இங்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கடந்த முறை ஐந்து இடங்கள் இருந்தன. ஏற்கனவே இருந்த நான்கு பேரும், புதிதாக இரண்டு பேரும் களமிறங்கினார்கள். 32 இடங்களுக்கு 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஆறு பேரும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறையை விட ஒரு இடம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. முதன்முறையாக, இந்த நகரில் இரண்டாவது பெரிய கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி எழுச்சி பெற்றிருக்கிறது. ஆவோமோரியில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், இளம் உயர்நிலைப்பள்ளிகளிலும் இலவச மதிய உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதைத் தங்களின் சாதனையாக மக்கள் முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்தது. மீண்டும் தேர்வானால், குழந்தைகளின் நல்வாழ்வுக்கு மக்களோடு இணைந்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார்கள். வாக்குப்பதிவு நடந்ததற்கு அடுத்த நாள், ஆவோமோரி ரயில் நிலையத்திற்கு அருகில் ஆறு வேட்பாளர்களும் இணைந்து மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தைக் கேட்ட ஒரு வயதான பெண்மணி, ‘‘அற்புதம்... ஆறு பேரில் நான்கு பேர் பெண்கள்’’ என்று பாராட்டுதல்களைத் தெரிவித்துவிட்டு நகர்ந்தார். மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஆறு வேட்பாளர்களும் மக்களுக்கு உறுதி அளித்தனர்.