world

img

தொய்வின்றித் தொடர்கிறது கியூபப் புரட்சி....

ஹவானா:
“கியூப கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் முதன்மைச் செயலாளர் என்றமுறையில் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு முடிவுக்கு வருகிறது; அந்தப்பொறுப்பில் நான் எனது கடமையை நிறைவாக செய்து முடித்திருக்கிறேன் என்ற திருப்தியுடன், நமது நேசத்திற்குரிய தேசத்தின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது என்ற உறுதியுடனும் கட்சியின் உயர் பொறுப்புகளில் அடுத்த தலைமுறை முழுமையாக பங்கேற்க வழி செய்யும் விதத்தில், அந்தப் பொறுப்புகளில் நான் தொடர்ந்து நீடிப்பதில்லை என்ற அறிவிப்புடனும் எனது பொறுப்பினை நிறைவுசெய்கிறேன். கட்சியின் ஒரு உறுப்பினராக நான் தொடர்வேன்; கட்சியின் ஒரு புரட்சிகரமான போராளியாக நான் தொடர்வேன்; எனது இறுதிமூச்சு வரை கட்சியின் பணிகளுக்காக எனது அதிகபட்ச பங்களிப்பை செலுத்துவேன்; என்னைத் தொடர்ந்து பொறுப்புக்கு வரும் எனது சக தோழர்கள் பலமும்மதிப்பும் வாய்ந்தவர்கள் என்ற உறுதியான புரிதல் எனக்கு இருக்கிறது. 

கியூப புரட்சியையும் சோசலிசத்தை யும் பாதுகாப்பதற்காக எனது இறுதிக்காலம் வரையிலும் உங்களோடு ஒருதோழராக மிகுந்த உறுதியோடு பயணிப்பேன்”.- ரால் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பு உலகெங்கிலும் அரசியலை உற்றுநோக்கும் சக்திகளுக்கு, கம்யூனிஸ்ட்டுகளின் மேன்மை, ஜனநாயகம் என்பதன் உயர்ந்த மாண்புகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி பின்பற்றுகின் றன என்பதை விளக்கும் விதமாக அமைந்தது.கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8வதுமாநாட்டில், கட்சியின் மத்தியக்குழு வின் முதன்மை செயலாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தோழர் ரால் காஸ்ட்ரோ ஆற்றிய உரை, கியூபாவின் இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது மாநாடு ஏப்ரல் 16 அன்று ஹவானாவில் துவங்கியது. ஏப்ரல் 19 வரை நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு முதன்மைச்செயலாளரும், ராணுவத் தளபதியுமான ஜெனரல் ரால் காஸ்ட்ரோ ரஸ்தலைமையேற்றார். ஏப்ரல் 19 அன்று மாநாடு நிறைவுபெற்ற நாள், கியூப புரட்சியின் சோசலிசப் பிரகடனத்தை கியூபாவின் மகத்தானத் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ வெளியிட்டதன் 60ஆம் ஆண்டு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோசலிச கியூபாவுக்கு வழிகாட்டும் கட்சி
மாநாட்டைத் துவக்கி வைத்து கட்சியின் இரண்டாம் செயலாளர் ஜோஸ் ரமோன் மச்சாதோ வென்ட்டுரா உரையாற்றினார்.“வரலாறு நெடுகிலும் நம்மை வழிநடத்திய தேச பக்தர்களின் அடுத்த தலைமுறை இப்போது வந்துவிட்டது. சுதந்திரம், சமூக நீதி, கண்ணியமான வாழ்க்கை ஆகிய மாண்புகளை உயர்த்திப் பிடிக்கிற, தேசிய ஒற்றுமையை உத்தரவாதப்படுத்துகிற ஒரு அமைப்பாக நமது கட்சி வழிகாட்டி வருகிறது. கட்சியின் 7வது மாநாட்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்களும் ஒட்டுமொத்த கியூப மக்களும் மிக முக்கியமான அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கிறார்கள்; கடந்த மாநாட்டில் நாம் திருத்தி அமைத்த வழிகாட்டுதல்களை ஏற்று செயல்படுத்தியிருக்கிறார்கள். மக்களால் வாக்களித்து இறுதிசெய்யப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டத்தையும் அமல்படுத்தியிருக்கிறார்கள்” என்று மச்சாதோ கூறினார். கடந்த 5 ஆண்டு காலத்தில் செய்து முடித்தவை பற்றியும், தொடர்ந்து செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக விவரித்த அவர்,கட்சியின் கிளைகள் அளவில் உள்ளஅமைப்புகள் எந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவையாக இருக்கின்றன என்பது குறித்தும் அவற்றை இன்னும் எப்படி மேம்படுத்துவது என்பது குறித்தும் பேசினார்.

மாநாட்டில் கியூப சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதை பெருமிதத்துடன் அவர் சுட்டிக்காட்டினார். உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு சேவைத் துறைகளில்ஈடுபட்டிருப்பவர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள், ராணுவவீரர்கள், ஓய்வூதியர்கள் உள்பட அனைத்து தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதை குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த பிரதிநிதிகளில் 94சதவீதம் பேர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். 

விவாதிக்கப்பட்டநான்கு அம்சங்கள்
துவக்க மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்தாபன மாநாட்டில் மத்தியக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்துமுதன்மைச் செயலாளர் ரால் காஸ்ட்ரோ உரையாற்றினார். அந்த அறிக்கையில் பிரதானமாக நான்கு அம்சம் இடம்பெற்றிருந்தன. கியூபப் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் சோசலிசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது; புரட்சி மற்றும் கட்சியின் சமூகப் பொருளாதாரகொள்கைகளுக்கான வழிகாட்டுதல் களின் அமலாக்கம் 7வது மாநாட்டிற்குப்பிறகு கியூப சமூக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள விளைவுகள்; கட்சியின் செயல்பாடு, மக்களுடனான அதன் உயிரோட்டமான தொடர்பு,தத்துவார்த்த செயல்பாடு மற்றும் கட்சி ஊழியர் கொள்கை - ஆகியநான்கு அம்சங்கள் பற்றி அறிக்கையை முன்மொழிந்த ரால் காஸ்ட்ரோ அவை பற்றி விரிவாக விவரித்தார். 

60 ஆண்டுகளுக்கு முன்பு கியூபபுரட்சியின் சோசலிசக் குணாம்சத்தை பாதுகாப்பதற்காக கட்சியின் அமைப்புஎந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கட்சியின் உறுப்பினர்களும், கிளைகளும் மக்களோடு எந்த அளவிற்கு உயிரோட்டமான தொடர்பும் தத்துவார்த்த உறுதியும் கொண்டி ருக்க வேண்டும் என்றும் தோழர் பிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்ட அம்சங் களை நினைவூட்டிய முதன்மைச் செயலாளர் ரால் காஸ்ட்ரோ, பிடல் காஸ்ட்ரோவின் வழிகாட்டுதல் களையும் அவர் உயர்த்திப் பிடித்த ஸ்தாபன நெறிகளையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்றும்மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அழைப்புவிடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 17, 18 தேதிகளில் மாநாடு விரிவான விவாதங்களை நடத்தியது. மேற்கண்டநான்கு பிரதான அம்சங்களையும் விவாதிப்பதற்காக மாநாட்டுப் பிரதிநிதிகள் நான்கு கமிஷன்களாகப் பிரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.கியூப ஜனாதிபதியும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தியாஸ் கேனல் உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மாநாட்டு வழிகாட்டும் குழுவாக செயல்பட்டு, விவாதங்களை ஒருங்கிணைத் தார்கள்.

அரசின் செயல்பாடுபற்றி விவாதம்
முதன்மைச் செயலாளர் முன் மொழிந்த அறிக்கை மட்டுமின்றி, கியூப அரசின் அமைச்சரவை முன்மொழிந்த அரசின் செயல்பாடுகள் மற்றும் அதை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான அறிக்கையும் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கையை கியூப அரசின் அமைச்சரவைச் செயலாளரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான ஜோஸ் ரிக்கார்டோ குவேரா முன்மொழிந்தார்.  அந்த அறிக்கை, கடந்த 5 ஆண்டுகாலத்தில் அரசின் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும், குறைபாடுகளைக் களைவதற்காக கட்சியும் அதன் உறுப்பினர்களும் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் விவரித்தது. அரசுப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள், மக்கள் பிரச்சனைகள் சில இடங்களில் உடனடியாக கவனிக்கப்படா மல் காட்டப்படும் அலட்சியம், அதைசரிசெய்வதற்கான நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அந்த அறிக்கை விவரித்தது. இந்த அம்சங்களை எப்படி எதிர்காலத்தில் மேம்படுத்துவது என்பது குறித்தும் விவாதம் நடைபெற்று, இரண்டு அறிக்கைகளும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

புதிய தலைமை
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 18 அன்று கட்சியின் புதிய தலைமைக்கான முன்மொழிவை முதன்மைச் செயலாளர் ரால் காஸ்ட்ரோ, மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே முன்மொழிந்தார். அதன்மீது பிரதிநிதிகள் வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 19அன்று கியூப கம்யூனிஸ்ட் கட்சியின்புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட் டது.கட்சியின் புதிய முதன்மைச் செயலாளராக மிகுயேல் தியாஸ் கேனல் பெர்முடஸ் தேர்வு செய்யப்பட்டார்.மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே பெரும் உற்சாகத்துடன் இதை ரால் காஸ்ட்ரோ அறிவித்தார்.சோசலிச கியூபாவின் ஜனாதிபதியாக உள்ள தியாஸ் கேனல், கட்சியின் முதன்மைச் செயலாளராக  தேர்வுசெய்யப்பட்டிருப்பது, சோசலிச கியூபாவின் 60 ஆண்டு கால வரலாற்றில்பிடல் காஸ்ட்ரோ, ரால் காஸ்ட்ரோவைத் தொடர்ந்து ஒரு புதிய தலைமுறையிடம் சோசலிசக் கட்டுமானத்திற்கான பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது.தியாஸ் கேனலுடன் 14 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு தேர்வுசெய்யப்பட்டது. 14 பேரில் 9 பேர் ஏற்கெனவே அரசியல் தலைமைக்குழு வில் இடம்பெற்றிருப்பவர்கள். மச்சாதோ உள்ளிட்ட 5 மூத்த தலைவர்கள் அரசியல் தலைமைக்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர6 பேர் கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசியல் தலைமைக்குழு வில் ஜனாதிபதி தியாஸ் கேனல், தேசிய மக்கள் நாடாளுமன்றத் தலைவர்ஜுவான் ஹெர்னான்டஸ், கியூப குடியரசின் துணை ஜனாதிபதி சால்வடார் மெசா, துணைப் பிரதமர் ராபர்ட்டோ மொரேல்ஸ், புரட்சிகர ராணுவப் படைகளின் தளபதி ஜெனரல் ஆல்வரோ லோபஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், கியூப தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் உலிசஸ் கிளார்ட்டே, கியூபதேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரசா மரியா, கியூப மரபணுவியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப பொறியியல் மையத்தின்பொது இயக்குநர் மார்த்தா அவிலா,பிரதமர் மனுவேல் குரூஸ், அமைச்சரவை செயலாளர் ஜோஸ் ரிக்கார்டோ குவேரா, தொழில் நிறுவனங்கள் நிர்வாகக் குழுவின் செயல் தலைவர் லூயிஸ் ஆல்பர்ட்டோ ரோட்ரிகஸ், உள்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல்லாசரோ ஆல்பர்ட்டோ, கட்சியின் ஆர்ட்டிமிசா மாகாண குழுவின் முதன்மைச் செயலாளர் பிளாடிஸ் வெர்டிசியா ஆகிய 14 பேர் இடம்பெற்றுள்ள னர்.கியூபாவின் புதிய கட்சித் தலைமையை தேர்வு செய்த 8வது மாநாட்டில் நிறைவாக புதிய முதன்மைச் செயலாளர் தியாஸ் கேனல் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாநாடு எழுச்சிமிகு முழக்கத்துடன் நிறைவுபெற்றது:“புரட்சியைப் பாதுகாப்போம். புரட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். சோசலிச கட்டுமானத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்வோம். நாம் இன்னும் பணியை செய்து முடித்துவிடவில்லை; ஆனால் முன்னெப்போதையும்விட இன்னும்துல்லியமாக சோசலிசத்தை கட்டமைப்பதற்கான மகத்தான பணியை சற்றும்தொய்வின்றி தொடரும் கடமை அளிக்கப்பெற்றுள்ளோம். அந்தக் கடமையை செய்து முடிப்போம்.”

கிராண்மா செய்திகளில் இருந்து... 

==எஸ்.பி.ஆர்==

;