world

img

ஸ்பெயின் நாட்டில் எரிமலை சீற்றம் - பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம் 

கனரி : ஸ்பெயின் நாட்டின் கனரி தீவில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர் .

ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுகளில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது. இதனால் , கரும்புகையுடன் எரிமலை வெடித்துச் சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது. எரிமலை குழம்பு , மக்கள் வசித்து வந்த குடியிருப்பு பகுதிகளை எட்டியது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

எரிமலை சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதாலும், எரிமலை குழம்பு தொடர்ந்து வெளியேறி வருவதாலும் அப்பகுதியில் ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் . மேலும் , எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஏற்பட்டுள்ள எரிமலை சீற்றம் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

;