world

img

காலத்தை வென்றவர்கள் : பியேர் கியூரி நினைவு நாள்...

பிரான்சில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானி பியேர் கியூரி. ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளைமேம்படுத்த உதவின. அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை உருவாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகுமைக்ரோபோன்,குவார்ட்சு கடிகாரங்கள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது.முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் ‘முறுக்குத் தராசு’ ஒன்றை உருவாக்கினார்.

காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டுபிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது.மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் ‘கியூரி புள்ளி’ எனப்படுகிறது.1895-ல் சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட காதலால் அவரைத் திருமணம் செய்துகொண்டார். துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் “ கதிரியக்கம்” (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம் துகள்களிலிருந்து வெளிவரும்வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கருஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளியிட்டனர். கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதலில் கண்டு பிடித்தனர். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில்சில நேர் மின்தன்மை உடையன என்றும் , சிலஎதிர்மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலை மின்தன்மை உடையன என்றும் கண்டறிந்தனர், இவையே ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் எனப்பட்டன.

கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி எனப்படும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7x1010 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910-ல் ‘கதிரியக்கத் துறை காங்கிரஸ் என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது. பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். 1906ல் பியேர் கியூரி காலமானார்.

பெரணமல்லூர் சேகரன்

;