world

img

10 ஆயிரம் இந்திய இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் இஸ்ரேல்; ஆபத்தை உணராமல் இந்தியர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் மோடி அரசு!

எட்டு நாள் ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் இஸ்ரேல் அரசு  10,000 இந்திய இளைஞர்களை போர் பகுதிகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த வேலை சேர்ப்பு இயக்கம் புனேவில் உள்ள அவுந்த் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் நடந்துள்ளது.

இஸ்ரேல்- காசா மீதான போரை துவங்கிய பிறகு இஸ்ரேலில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் இருந்த சுமார் 1 லட்சம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு வேலையில் இருந்து  துரத்தி விட்டது. இந்நிலையில், அந்நாட்டின் கட்டுமானம், பெயின்டிங், வெல்டிங்,  உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க இந்தியா -இஸ்ரேல் ஆகிய இரு அரசுகளுக்கும் இடையே  2023  ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்ட்டது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் வேலையின்மை அதிகமுள்ள பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா,உபி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இளைஞர்களை நேர்முகத்தேர்வு மூலம் இஸ்ரேல் நிறுவனங்கள் பணிக்கு எடுத்து வருகின்றன.

தற்போது வரை  4,800  இளைஞர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு கூடுதலாக செப்டம்பர் 18 அன்று 1500 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன்மூலம் போருக்கு பிறகு இஸ்ரேலுக்கு அனுப்பட்ட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 5000 த்தை கடந்துள்ளது.

இந்நிலையில், கூடுதலாக 10,000 இளைஞர்களை  வேலைக்கு எடுக்க இஸ்ரேல்  முதலாளிகள் முடிவெடுத்துள்ளனர். இதனையும் இந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

காசாவுடனான போரை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புடன் போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலின் சுயநலத்துக்காக இந்திய இளைஞர்களை  மோடி அரசு பலி கொடுக்க தீவிரமாக செயல் படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த இரு நாட்களாக இஸ்ரேலின் தெற்கு எல்லை, துறைமுகம், தலைநகர் ஆகிய பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் சூழலில் மோடி அரசின் முடிவு இந்திய இளைஞர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்க அதிக வாய்ப்புள்ளது.

ஆனாலும், மோடி அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆயுத உபகரணங்களை வழங்குவது, ஆபத்தை உணராமல் வேலைக்கு தொழிலாளர்களை அனுப்புவது என போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.