world

img

மார்க்சும் இந்தியாவும்

மே 5 மகத்தான கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த தினம்! 200 ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டோடிவிட்டாலும், உலகம் பல மகத்தான மாற்றங்களைக் கண்டிருந்தாலும் மார்க்சின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்றும் பொருந்துபவையாகவே உள்ளன. அதில்தான் மார்க்சின் மகத்தான ஆய்வுமுறைகளின் செழுமை அடங்கியுள்ளது. பல முதலாளித்துவ தேசங்களின் ஆளும் வர்க்கங்கள் இன்றும் மார்க்ஸ் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். ஆனால் கோடானு கோடி உழைக்கும் மக்கள் தமது எதிர்காலத்துக்கு மார்க்சின் கோட்பாடுகள் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருக்கின்றன என்பதை உணர்ந்துள்ளனர். இந்தியா குறித்து மார்க்சின் ஆய்வுகள் இந்திய சமூகத்தை உள்வாங்கிக் கொள்வதில் மிகப்பெரிய வெளிச்சத்தை தருகின்றன எனில் மிகை அல்ல. பிற்கால ஆய்வுக்காக அவர் சேகரித்த பல குறிப்புகள் இந்தியா மட்டுமின்றி தமிழ்நாடு குறித்தும் இருந்தன என்பது மிகவும் வியப்பூட்டுபவையாகும். துரதிர்ஷ்டவசமாக மார்க்ஸ் அவர்களால், இந்த குறிப்புகள் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட முடியாமல் போய்விட்டது.

முழு விடுதலைக்கு முதல் குரல்

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவின் முழுவிடுதலைக்கு முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்பது மறைக்கப்பட்ட உண்மை! அத்தகைய முதல் குரல் காரல் மார்க்ஸ் அவர்களுடையது எனில் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். ஆம்! பிரிட்டிஷார் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தினர். பஞ்சாலைகள்/ரயில்வே/ தொலைத்தொடர்பு/இரும்பாலைகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

அதுவரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மட்டுமே கொண்டிருந்த இந்திய சமூகம் தனது வரலாற்றில் முதன் முதலாக கனரகத் தொழில் உற்பத்தியைக் கண்டது.  ‘பிரிட்டிஷாரின் இந்த செயல் முற்றிலும் தமது சுய லாபத்திற்காகவே’ என்று ஆணித்தரமாக மார்க்ஸ் கூறினார். இந்தியாவில் விளையும் பருத்தி மற்றும் பல மூலப்பொருட்களை அடிமாட்டு விலைக்கு  கொள்முதல் செய்து பிரிட்டன் கொண்டு செல்லவும் பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் துணி மற்றும் ஏனைய பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வரவும் இந்த ரயில்வேக்கள் பிரிட்டிஷாருக்கு தேவைப்பட்டன. இதன் காரணமாக இரும்பாலைகளும் ஏனைய தொழில்களும் உருவாவது  தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. சுயலாபத்திற்காக கொண்டுவரப்பட்டாலும் இந்தியாவில் முதன் முதலில் கனரக தொழில் உற்பத்தியும் அதன் விளைவாக நவீன தொழிலாளி வர்க்கமும் தோன்றும் ஒரு முக்கிய நிகழ்வை பிரிட்டிஷார் துவக்கி வைத்தனர் என்பதை மார்க்ஸ் பதிவு செய்தார்.

இந்திய மண்ணில் முதல் முறையாக நவீன தொழிலாளி வர்க்கம் உருவாவதும் அதன் பின்விளைவுகளும் இந்திய சமூகத்துக்கு முக்கிய வளர்ச்சிப் போக்காக அமையும் எனவும் மார்க்ஸ் ஆழமாக குறிப்பிட்டார்.  பிரிட்டிஷ் முதலாளித்துவம் இந்திய மக்களை சமூக துயரங்களிலிருந்து விடுதலை செய்யாது! ஆனால் அது என்ன செய்யும் எனில், அந்த விடுதலைக்கான புறச்சூழல்களை தனது சுயநலனுக்காக உருவாக்கும்! இதைவிட கூடுதலாக எதையாவது முதலாளித்துவம் செய்துள்ளதா எனும் கேள்வியை மார்க்ஸ் முன்வைக்கிறார். மக்களை இரத்தம் சிந்த வைக்காமல், துன்பங்களில் தள்ளாமல், வாழ்வாதாரத்தை தாழ்த்தாமல் என்றைக்காவது முன்னேற்றத்தை முதலாளித்துவம் உருவாக்கியுள்ளதா எனும் பொருள் பொதிந்த கேள்வியை மார்க்ஸ் முன்வைக்கிறார். எனினும் இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் பிரிட்டிஷாருக்கு பயன்படும் அளவுக்கு இந்திய மக்களுக்கு பயன்படுமா எனும் கேள்வியையும் மார்க்ஸ் எழுப்பினார். அவ்வாறு மக்களுக்கு பயன்பட வேண்டுமானால் கீழ்கண்ட இரண்டில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என கருதினார்:

  1.     பிரிட்டனில் முதலாளித்துவ ஆட்சி தூக்கி எறியப்பட்டு தொழிலாளி வர்க்க ஆட்சி அமைய வேண்டும்.
  2.     இந்தியர்கள் தமது வலிமையைப் பெருக்கி பிரிட்டிஷ் அடிமை ஆட்சியை முழுமையாக தூக்கி எறிய வேண்டும்.

ஆம்! பிரிட்டிஷார் புகுத்திய நவீன தொழில் உற்பத்தியின் பலன்கள் இந்திய மக்களுக்கும் பயன்பட வேண்டும் எனில் பிரிட்டிஷ் அடிமை ஆட்சியை இந்தியர்கள் முழுமையாக தூக்கி எறிய வேண்டும் என மார்க்ஸ் கூறினார். மார்க்சின் மதிப்பீடு மலைக்க வைக்கும் ஒன்று எனில் மிகை அல்ல! இதனை மார்க்ஸ் எழுதியது 1853ல்! மகத்தான சிப்பாய்-விவசாயிகள் கிளர்ச்சி நடப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு! இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு! மார்க்ஸ் சொன்ன முதல் நிகழ்வு நடக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன இரண்டாவது நிகழ்வு 1947ல் நடந்தது.

மார்க்ஸ் சாடிய சாதியம்

உலகில் எந்த சமூகத்திலும் இல்லாத ஒரு சாபக்கேடாக இந்தியாவில் சாதியம் உள்ளது. முதலில் வர்ணாசிரமமும் பின்னர் சாதிய முரண்பாடுகளும்  இந்தியாவில் வர்க்க முரண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இந்திய சமூகத்தின் பிற்போக்குத் தன்மைக்கு சாதியம் ஒரு முக்கியக் காரணி என்பதை காரல் மார்க்ஸ் 1852-53ஆம் ஆண்டுகளிலேயே பதிவு செய்துள்ளார். இந்திய சமூகத்தை ஆய்வு செய்த அவர் காலனியாதிக்கத்துக்கு முன்பு உற்பத்தி முறையின் அடிப்படை என்பது கிராம வாழ்வாக இருந்தது எனவும் கிராமத்திற்குள் மாற்றவே முடியாத வேலைப்பிரிவினை இருந்தது எனவும் இதற்கு அடிப்படை சாதிய முறையே  காரணம், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கிறார். ஒரு சாதியில் பிறந்த மனிதன் அந்த சாதியுடன் உடைக்க முடியாத சமூக சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறான் எனவும் அதிலிருந்து அவனுக்கு விடுதலை சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது எனவும் கூறுகிறார். 

இந்தியாவில் மனிதனைவிட பசுவுக்கு அதிக மரியாதை; பசியால் எலும்பு தெரிய துன்பப்படும் மனிதனும் நன்றாக செழித்த பசு அல்லது எருதுவும் அருகருகே இருப்பதை இந்தியாவில் காணலாம் எனவும் கூறுகிறார். இயற்கையை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர வல்லமை படைத்த மனிதன் விலங்குகளை கும்பிடுகின்ற முரண்பாடான நிலை உள்ளது எனவும் ஒப்பிடுகிறார். இந்தியா உட்பட கிழக்கத்திய தேசங்களின் வரலாறு ஏன் மதங்களின் வரலாறாக காட்சி அளிக்கின்றன எனும் கேள்வியையும் எழுப்புகிறார். மார்க்ஸ் இந்த கேள்வியை எழுப்பி 170  ஆண்டுகளுக்கு பின்னரும் மதங்கள் இன்றும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டுள்ளன எனும் கொடுமையை யார்தான் புறம் தள்ள முடியும்?

இந்தியர்கள் முன்னேற வேண்டுமெனில் இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். எனினும் இந்தியர்கள் குறித்து மார்க்சுக்கு மிக உயர்ந்த எண்ணம் இருந்தது. இந்தியா ஒரு மகத்தான தேசம்! ஐரோப்பியர்களின் பல மொழிகளுக்கும் மதங்களுக்கும் இந்தியா தாய் மண்ணாக உள்ளது; இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள்; வீரம் படைத்தவர்கள்; அமைதியானவர்கள் என மார்க்ஸ் மெச்சுகிறார். அதே சமயத்தில் பிரிட்டிஷாரை மிகவும் கடுமையாக சாடுகிறார். அவர்களது நாகரிகம் இங்கிலாந்தில் மேன்மையானது; ஆனால் இந்தியா போன்ற காலனிகளில் அது அம்மணப்பட்டு நின்றது என்கிறார் மார்க்ஸ். தேசிய சொத்து பற்றி கவலைப்படும் பிரிட்டிஷார், இந்திய அரசர்கள் தமது நிறுவனங்களிடம் செய்த முதலீடுகளை இவர்கள் அபகரிக்கவில்லையா? பக்தர்களிடம் பணம் பறிக்க ஜெகநாத் கோவிலில் கொலை மற்றும் விபச்சார செயல்களில் ஈடுபடவில்லையா? இந்திய மக்களிடம் மெகா கொள்ளையில் ஈடுபட்டதாக மகா திருடன் ராபர்ட் கிளைவ் ஒப்புதல் வாக்கு மூலம் தரவில்லையா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார்.

இந்தியா பற்றிய குறிப்புகள்

கி.பி. 664 முதல் 1858 வரை குறிப்புகள் சுமார் 190 பக்கங்கள் எடுத்துள்ளார் மார்க்ஸ். அவற்றில் சில முக்கியானவை:

  1.     கி.பி.600 முதல் 1100 வரை, முஸ்லிம் மற்றும் இந்து மன்னர்களுக்கு இடையே நடந்த சமமான அளவுக்கு முஸ்லிம் மன்னர்களிடையேயும் போர்கள் நடந்தன.
  2.     இந்தியா மீது கஜினி முகம்மது 16 முறை படையெடுத்துள்ளார். பலமுறை இந்து மன்னர்களுக்கு ஆதரவாக போர் செய்துள்ளார்.
  3.     அலாவூதின் கில்ஜி 15000 முகலாயர்களை கொன்றார்.
  4.     1526- முதல் பானிபட் போர்- பாபர்- இப்ராகிம் லோடி இடையே நடந்தது. லோடிக்கு ஆதரவாக 40,000 இந்துக்கள் போரிட்டனர்.
  5.      பாபர் துப்பாக்கி பவுடரை முதன் முதலில் பயன்படுத்தினார்.
  6.      ஹுமாயூன் இஸ்லாத்தில் சுஃபி பிரிவை ஆதரித்தார். 
  7.     அக்பர் சிறந்த பொதுப்பணிகளை அமலாக்கினார். மதத்தில் நாட்டம் இல்லை; இராமாயணமும் மகாபாரதமும் பார்சி மொழியில் மொழிபெயர்ப்பு/ பைபிள் மொழி பெயர்ப்பு/ சிர்சியா வரி ஒழிப்பு/ உடன் கட்டை ஏறுதலை கைவிடக்கோரி இந்துக்களிடம் வற்புறுத்தியவர்.
  8.     அக்பரின் நிதி அமைச்சர் தோடர்மால்-திட்டமிடப்பட்ட வரி வசூல் முறை – மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு என நிர்ணயிப்பு/ தில்லி உலகிலேயே அழகான நகரமாக ஆக்கப்பட்டது.
  9.     அக்பருக்கு எதிராக கலகம் செய்த முஸ்லீம் அதிகாரிகள்- அப்துல்லாகான், மூன்று மிர்சா சகோதரர்கள், தாவூத், ஷேர்கான், ஹக்கீம்(அக்பரின் சகோதரர்), யூசுஃப், உஸ்பெக் முஸ்லீம்கள், பெர்சிய முஸ்லீம்கள், சுல்தானா சந்த், சலீம் (அக்பரின் மகன்).
  10.     1764ல் முதல் சிப்பாய் கலகம் –பாட்னாவில்- சிப்பாய்கள் பீரங்கி வாயில் கட்டி சுடப்பட்டனர்.
  11.     1766ல் 50,000 அதிகாரிகள் ராபர்ட் கிளைவை எதிர்த்து ராஜினாமா (பாட்டா தொகை அழிப்பை எதிர்த்து) 50,000 பேரும் டிஸ்மிஸ்- இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை.
  12.     1773- முகம்மதியர்களுக்கு குரான்/ இந்துக்களுக்கு- வேதங்கள்/ ஏனைய உள்ளூர் மக்களுக்கு அவர்களுக்குரிய சட்ட திட்டங்கள் என முடிவு.u    1855-56 சந்தால் பழங்குடியின மக்களின் கலகம் 7 மாதங்கள்! 

தமிழ்நாடு குறித்து

  1.     டெக்கான் பிரதேசத்தில் 5 மொழிகள் - தமிழ் - திராவிட தேசத்தில்/ கன்னடம்/ தெலுங்கு/மராத்தி/ஒரியா
  2.     மிகவும் பழமையான ஆட்சி மற்றும் மொழி தமிழ்.
  3.     பாண்டிய அரசாங்கம்- தலைநகரம்-மதுரை.
  4.     சோழர்கள்- தலைநகரம்- காஞ்சிவரம்.
  5.     சேரர்கள்- திருவாங்கூர்/கோயம்புத்தூர்/மலபார் பகுதி.
  6.     மாலிக்காபூர் கன்னியாகுமரி வரை படையெடுத்தது; முதல் முஸ்லீம் படையெடுப்பு தமிழகத்தில் என குறிப்பிடுகிறார். குமரியில் ஒரு மசூதியை மாலிக்காபூர் கட்டியதாகவும் குறிப்பிடுகிறார்.
  7.     1807 வேலூர் கலகம்- திப்புவின் புதல்வர்கள் பங்கேற்பு.
  8.     மெட்ராஸ் ராயத்வாரி அமைப்பு- மூன்றிலொரு பங்கு அரசுக்கு- விளைச்சல் தவறினாலும் அரசுக்கு வரி கட்ட வேண்டும்- விவசாயி வேண்டும் என்றே விளைச்சலை பாதித்தால்- தண்டனை.

இப்படி பல குறிப்புகளை காரல் மார்க்ஸ் எடுத்து வைத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவற்றை பயன்படுத்தி விரிவான நூல்களை அவரால் உருவாக்க இயலவில்லை. எனினும் மார்க்சின் (ஏங்கெல்சும் உட்பட) எழுத்துக்கள் இன்றளவும் கம்யூனிஸ்டுகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன எனில் மிகை அல்ல! அவற்றை கற்பது கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு மிக இன்றியமையாதது! 

- அ. அன்வர் உசேன்