மாஸ்கோ, ஜூலை 4- பொது மக்கள் மீது குண்டுகளை வீசி நாசகர வேலைகளைச் செய்து விட்டு, ரஷ்யா மீது உக்ரைன் பழிபோடுகிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடுத்து 132ஆவது நாளாகியுள்ள நிலையில், பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் அவர்கள் கூடுமிடங்கள் மீது தாக்குதல் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொதுமக்கள் உயிரிழப்பால் ரஷ்யாவின் மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்தான் பொது மக்கள் மீதான தாக்குதல்களுக்குத் தாங்கள் காரணம் இல்லையென்றும், உக்ரைன்தான் குண்டுகளை வீசி விட்டு, எங்கள் மீது குற்றம் சாட்டி திசைதிருப்புகிறார்கள் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய தேசியப் பாதுகாப்பு நிர்வாக மையத்தின் தலைவரான கர்னல் ஜெனரல் மிக்கேல் மிசின்ட்சேவ், “ஜூன் 30, 2022 அன்று டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் ஸ்லேவ்யான்ஸ்க் பகுதியில் உக்ரைனின் ராணுவத்தினர் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். ஸ்லேவ்யான்ஸ்க் உணவுத் தொழிற்சாலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைனின் பொது மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது என்று பழிபோடவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று குற்றம் சாட்டினார். உக்ரைன் தொடர்ந்து இத்தகைய வேலைகளைச் செய்து வருகிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. குண்டுகள் வீசப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த இடத்திற்கு உக்ரைனின் ஊடகவியலாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் கர்னல் ஜெனரல் மிசின்ட்சேவ் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய ஏற்பாடுகள், அனைத்தும் சாவகாசமாக அமர்ந்து திட்டமிடப்பட்டவை என்பதையே அம்பலப்படுத்துகிறது என்றும், ரஷ்யாவுக்கு எதிரான கருத்தை உருவாக்குவதே இவற்றின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்லேவ்யான்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். பிப்ரவரி 24 அன்று தாங்கள் தொடங்கிய தாக்குதல்கள் நாஜிகள் இல்லாத, ராணுவமயம் இல்லாத உக்ரைனை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்றும், ராணுவத் தளங்களைக் குறிவைத்தே தங்கள் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. பொது மக்கள் மீது எங்கள் தாக்குதல்கள் நடக்காது என்றும் ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது.