world

img

விண்வெளி நிலைய வசிப்பிட தொகுப்புடன் விண்ணுக்குப் பறந்தது சீன ராக்கெட்

பெய்ஜிங், ஏப்.30- சீனாவின் லட்சிய விண்வெளி நிலைய திட்டத்தின் அங்கமாக நிறுவப்படும் புதிய வசிப்பிட தொகுப்பின் முதலாவது அமைப்பு விண்ணுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. டியென்குங் என்ற அந்த புதிய விண்வெளி நிலையத்தை 2022ஆம் ஆண்டில் முழுமையாக நிறுவிட சீனா திட்டமிட்டுள்ளது.  தற்போது புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரே சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம்பெறவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் சீனா பின் தங்கியிருப்பதாகவே சொல்லப்படுகிறது. கடந்த 2003ஆம் ஆண்டில்தான் தனது முதலாவது விண்வெளி வீரரை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. அதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய மூன்றாவது நாடாக சீனா உள்ளது. இதுவரை விண்வெளிக்கு இரண்டு முறை டியென்குங் 1, டியென்குங் 2 ஆகிய இரண்டு பரிசோதனை நிலையங்களை நிறுவ சாதாரண வடிவிலான தொகுப்பை விண்ணுக்கு சீனா அனுப்பியிருக்கிறது.

அவை விண்வெளி வீரர்கள் குறுகிய காலம் தங்குவதற்கானவையாக வடிவமைக்கப்பட்டன.ஆனால், இப்போது புதிதாக அனுப்பப்பட்டுள்ள பல்நோக்கு வசதிகள் கொண்ட டியென்குங் விண்வெளி நிலையம் 66 டன் எடை கொண்டது. அதன் நீளம் 16.6 மீட்டர், அகலம் 4.2 மீட்டர். இங்கு வரும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான வாழ்விட வசதி, உயிர்காக்கும் தொழில்நுட்ப வசதி, மின்சார வசதி போன்றவை இந்த விண்வெளி கலனில் இருக்கும். தற்போது அனுப்பியதை போல 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு அனுப்பி வைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும் 340 முதல் 450 கி.மீ உயரத்தில் அது பூமியை சுற்றி வரும். தற்போது விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான கூட்டு ஒத்துழைப்பை ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. 2024ஆம் ஆண்டில் அந்த விண்வெளி நிலையம் காலாவதியாகும். இந்த நிலையில், அதற்கு முன்பாக 2022ஆம் ஆண்டில் டியென்குங் விண்வெளி நிலையம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டால், அதுவே பூமியை வலம் வரும் ஒரே சர்வதேச விண்வெளி நிலையமாக திகழும்.

;