காரகஸ், பிப்.1- கியூபாவில் இருந்து இதுவரையில் 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கியூபாவும், வெனிசுலாவும் மருத்துவத்துறையில் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளன. அதில் கொரோ னா தடுப்பூசிகளை கியூபாவில் இருந்து வெனிசுலா இறக்குமதி செய்து கொள்வது ஒன்றாகும். அதன் அடிப்படையில் கியூபாவில் தயாராகும் அப்தலா, சாவரின் 02 மற்றும் சாவரின் பிளஸ் ஆகிய தடுப்பூசிகள் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பத்து லட்சம் சாவரின் பிளஸ் தடுப்பூசிகள் வெனிசுலா வந்து சேர்ந்தன. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட வெனிசுலா சுகாதாரத்துறை அமைச்சர், “கியூபாவில் உள்ள பின்லே தடுப்பூசி மையம் இந்த சாவரின் பிளஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வேறு தடுப்பூசி களை செலுத்திக் கொண்டவர்கள் ஆகியோருக்கு இந்த சாவரின் பிளஸ் தடுப்பூசி போடப்படும். வைரஸ் எதிர்ப்பு சக்தியை இந்த சாவரின் பிளஸ் அதிகப்படுத்தும்” என்று தெரிவித்தார். கியூபாவின் தயாரிப்புகளுக்கு உலக சுகாதாரக் கழகம் ஒப்புதல் தர மறுத்து வருகிறது. “அப்தலா தடுப்பூசிக்கு உலக சுகாதாரக் கழகத்தின் ஒப்புதலைப் பெற கடந்த ஓராண்டாகவே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதேபோன்று தற்போது சாவரின் 02 மற்றும் சாவரின் பிளஸ் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் பெறும் வேலையைத் தற்போது துவங்கியுள்ளோம்” என்கிறார் கியூபாவின் பின்லே தடுப்பூசி மையத்தின் இயக்குநரான விசென்ட் வெரெஸ். கடந்த ஆண்டில் வியட்நாம் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் 60 லட்சம் அப்தலா மற்றும் சாவரின் 02 தடுப்பூசிகளை கியூபாவிடமிருந்து பெற்றுள்ளன. மேலும் தடுப்பூசிகள் வேண்டும் என்று அந்த நாடுகள் கோரியுள்ளன. கியூபாவின் தடுப்பூசிகளை அவசர நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மெக்சிகோ, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடா ஆகிய நாடுகள் தங்கள் மருத்துவர்களுக்கு அனுமதி அளித்துள்ளன.