காரகஸ், ஜூலை 25- குறைவான வருமானத்தை ஈட்டும் மக்களுக்காக தென் அமெரிக்காவின் வெனிசுலா அரசு உருவாக்கி வரும் வீடுகளின் எண்ணிக்கை 46 லட்சத்தை எட்டியிருக்கிறது. 46 லட்சமாவது வீட்டின் திறவுகோலை பயனாளிக்கு வழங்கும் நிகழ்ச்சியில் அந்நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். 50 லட்சம் வீடுகள் என்ற இலக்கை நோக்கிய பயணம் என்றாலும் நாம் அதோடு நிற்கப் போவதில்லை. மேலும் பயணிப்போம்” என்றார். அமெரிக்காவின் பல்வேறு தடைகள் இருந்தாலும், ஏழைகளுக்கு வீடுகளை வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள மதுரோ, இந்தப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றையும் அமைப்பது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டில் இருந்து வீடு வழங்கும் திட்டம் பெரும் அளவில் நடைபெற்று வருகிறது. குறைந்த விலையில் மற்றும் இலவசமாகவும் வீடுகள் வழங்கப்படுகின்றன. குறைவான ஊதியத்தையே ஈட்டும் ஏழை மக்களுக்கான இந்த வீடுகள் நல்லமுறையில் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் கவுரவமான வாழ்க்கை வாழும் வகையில் வீடுகள் நல்ல வசதிகளுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.