வங்கதேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்
வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை துவங்குவதாக அறிவித்துள்ளனர். கட்டாயமான முறையில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் அமைப்பின் தலைவர்கள், அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை எழுப்பி இருந்தனர். ஆனால் ஷேக் ஹசீனா அரசு அவர்களை விடுவிக்க மறுத்துள்ளது. மேலும் அரச வன்முறையால் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் அவர் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார்.
கலிபோர்னியா பூங்காவில் பயங்கர தீ விபத்து
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநி லத்தில் உள்ள பூங்கா ஒன்றில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு காட்டுத் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 900 தீயணைப்பு வீரர்கள், 33 ஹெலிகாப்டர்கள், 400 தீயணைப்பு வாகனங்களை மாநில நிர்வாகம் ஈடுபடுத்தி 12 சதவீதத் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அதிக புகை மற்றும் வெப்பத்தின் காரணமாக கிட்டத்தட்ட 26 ஆயிரம் குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. உதவி
சூடானில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளத்தால் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 லட்சம் மக்களுக்கு உதவ ஐ.நா அவை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா.அவை உதவி வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அதிகளவிலான நிதி உதவி தேவைப்படுகிறது எனவும் ஐநா அவை குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ்: இணைய சேவை பாதிப்பு
ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுவரும் பிரான்ஸ் தலைநகர் பாரீசின் பல்வேறு இடங்களில் இணைய சேவை வழங்கும் ஃபைபர்-ஆப்டிக் இன்டர்நெட் கேபிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நகரம் முழுவதும் இணைய சேவை பாதிக்கப்பட்டது. ஒலிம்பிக் துவங்கி மூன்றே நாட்களில் இணைய சேவைக்கான கேபிள்கள் சேதமடைந்துள்ளது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
பாக். பலூசிஸ்தானில் மக்கள் போராட்டம்
பாகிஸ்தானில் பல ஆண்டுகாலமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட பலூ சிஸ்தான் மாநில மக்கள் மிகப்பெரும் போராட் டத்தை முன்னெடுத்துள்ளனர். அதிகளவிலான பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் அம்மாநிலம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொது நிகழ்வுகளுக்கு மக்களை ஒன்று கூட விடாமலும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாகிஸ்தான் அரசு பறித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.