திருவள்ளூர், டிச. 10- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வந்ததால் 38 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஒரு மாதமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது. இதையடுத்து குடிநீர் ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதும் குறைக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. தற்போது ஏரியில் 3,031 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1,222 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மி.கன அடி, ஏரியில் 3,284 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 325 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 276 கனஅடி வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 881 மி.கன அடி தண்ணீர் (மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி) உள்ளது. ஏரிக்கு 560 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 315 கனஅடி வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் 3,052 மி.கன அடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி). ஏரிக்கு 435 கன அடி தண்ணீர் வருகிறது. 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவு 500 மி.கன அடி நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 86 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.