what-they-told

img

இந்நாள் நவம்பர் 15 இதற்கு முன்னால்

1915- முதல் உலகப் போரின் போது அமைச்சர் பதவியிலிருந்து விலகி ராணுவத்தில் பணியாற்றச் சென்றார் வின்ஸ்டன் சர்ச்சில்! ஃபர்ஸ்ட் லார்ட் ஆஃப் அட்மிரா லிட்டி(கடற்படைக்கான கேபினெட் அமைச்சர் என்று கொள்ளலாம்!) என்ற பதவியிலிருந்த சர்ச்சில், துருக்கியில் நடைபெற்றுக்கொண்டிருந்த கலிப்பொலி தாக்குதல்களில் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, லங்க்காஸ்ட்டரின் சான்சலர்(அதுவும் கேபினெட் அமைச்சர் பதவிதான்!) பதவிக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அக்டோபரில் அப்பதவியிலிருந்து சர்ச்சில் விலகினாலும், அது ஏற்கப்படாமல், இங்கிலாந்தின் ஆளுகையிலிருந்த கிழக்கு ஆஃப்ரிக்காவுக்குத் தலைமை ஆளுனராகப் பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை சர்ச்சில் மறுத்துவிட, நவம்பர் 15இல் பதவி விலகல் ஏற்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த சர்ச்சில், ராணுவத்தில் சேர்ந்து, அடுத்த ஆண்டிலேயே லெஃப்ட்டினெண்ட் கர்னலாக உயர்ந்து, பெல்ஜியத்தில் நடைபெற்ற யுத்தங்களில் பங்கேற்றார். உண்மையில், பட்டப்படிப்பை முடித்தவுடன் 21 வயதில் ராணுவத்தில் சேர்ந்துவிட்ட சர்ச்சில், தாயின் செல்வாக்கைப் பயன்படுத்தி போர் நடக்கும் பகுதியில் பணியளிக்கச் செய்து, கியூபாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலைப்போரை ஒடுக்க ஸ்பெயினுடன் சேர்ந்து போரிட்டிருந்தார். அதன்பின் சில ஆண்டுகள் இந்தியாவிலிருந்த சர்ச்சில், தனக்குக் கல்வி போதாது என்று முடிவெடுத்து, நிறைய நூல்களைப் படிக்கத்தொடங்கினார். தென்-ஆஃப்ரிக்காவில் பூர்(போயர்) போர்க்காலத்தில் அவர்களிடம் பிடிபட்டுப் போர்க்கைதியாகவும் சிறிது காலமிருந்து, தப்பி வந்தார் சர்ச்சில்! 1900இல் அரசியலுக்குவந்து, அந்த  ஆண்டிலேயே 25 வயதில் நாடாளுமன்ற  உறுப்பினராகவும், 30 வயதில் இணையமைச்சராகவும், 33 வயதில் கேபினெட் அமைச்சராகவும் ஆகிவிட்ட சர்ச்சில், 34 வயதில்தான் திருமணம்செய்துகொண்டார்! முதல் உலகப்போர் முடிந்தபின் நடைபெற்ற தேர்தலில் ரயில்வேயை அரசுடைமையாக்குவது, ஏகபோக நிறு வனங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றைக்  குறிப்பிட்டுப் பிரச்சாரம் செய்த சர்ச்சில், போர், வான்படை ஆகியவற்றுக்கான கேபினெட் அமைச்சரானார்.  1900இல் கன்சர்வேட்டிவ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகி, 1904இல் லிபரல் கட்சியின் அமைச்சரான  சர்ச்சில் 1922 தேர்தலில் தோல்வியுற்று,  1924இல் சுயேச்சையாக வென்றபின் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து, நிதியமைச்சரானார். 1929 தோல்விக்குப்பின் இரண்டாண்டுகள் தீவிர  அரசியலி லிருந்தே ஒதுங்கியிருந்த சர்ச்சில், இரண்டாம்  உலகப்போர்க் காலத்தில் சிறப்பான பங்களிப்புக்குப்பின், 1940இல் இங்கிலாந்தின் பிரதமரானார். இருமுறை பிரதம ராக இருந்த சர்ச்சில், 1965இல் (90 வயதில்) இறப்பதற்கு ஓராண்டு முன்புவரை நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தவர் என்பதுடன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கவை!