technology

img

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை 20.02.2024 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற இஸ்ரோ அறிவித்துள்ளது.

பள்ளியில் படிக்கும்போது நான் என்னவாக ஆகவேண்டும் என்ற இலக்கை மாணவர்கள் மனதில் எழவைக்கவும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆர்வத்தைப் பள்ளி மாணவர்களிடையே கொண்டுவரவும் அதை நோக்கி அவர்களது படிப்பைக் கொண்டு செல்லவும் அரசு பலவித முயற்சிகளைச் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாகத் தான் இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நுட்பங்கள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறையாக முதல் ஆண்டில் 111 மாணவர்கள், இரண்டாம் ஆண்டில் 153 மாணவர்கள் மற்றும் 3ஆவது ஆண்டில் 337 மாணவர்களுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விண்வெளி அறிவியல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதனால் இஸ்ரோ ஏற்படுத்திய இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.

மாணவர்களின் இந்த ஆண்டுக்கான , இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (பிப்.20) முதல் வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in/registration        என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 2 வாரக் கால(மே.13 முதல் மே.24 ஆம் தேதி வரை) வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவற்றில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால்கள், ராக்கெட், செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவையும் அடங்கும். விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.