technology

img

19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்... இஸ்ரோ தலைவர் தகவல்....

ஸ்ரீஹரிகோட்டா:
பி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்இருந்து பிப்ரவரி 28 ஞாயிறன்று காலை10.24 மணிக்கு 19 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும்நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் பிரேசில் நாட்டின் ‘அமேசோனியா - 1’ செயற்கைக்கோள்,  இஸ்ரோ தயாரித்தசிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்நிலையில் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பி.எஸ்.எல்.வி சி-51, அமேசானியா -1 ஐ ஞாயிறன்று அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவியது.  இந்த பணியில், இந்தியாவும், இஸ்ரோவும் பிரேசிலால் வடிவமைக்கப்பட்ட மற்றும் இயக்கப்படும் முதல் செயற்கைக்கோளை ஏவுவதில் பெருமை மற்றும் மகிழ்ச்சி அடைகின்றன. இந்த சாதனைக்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார். 

மோடி படத்துடன் செயற்கைக்கோள்
பிரதமர் மோடியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சதீஸ் தவான் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் 78-வது ராக்கெட் மற்றும் பிஎஸ்எல்வி பிரிவில் 53-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;