1877 - லண்டனிலுள்ள விம்பிள்டன் என்ற பகுதியில், முதல் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. விம்பிள்டன்தான் டென்னிசுக்காக நடத்தப்பட்ட முதல் சாம்பியன்ஷிப் போட்டி என்பதுடன், இன்றுவரை மிக அதிக கவுரவமாகவும் கருதப்படுகிறது. ரேக்கெட்டால்(கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் முழுமையாக கடினமான பொருளால்(மரம்) ஆனவை பேட் என்றும், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஒயர் பின்னப்பட்டவை ரேக்கெட் என்றும் அழைக்கப்படுகின்றன.) விளையாடப்படும் விளையாட்டான டென்னிஸ், உண்மையில் 12ஆம் நூற்றாண்டுக்கால பிரான்சில் கையால் பந்தை அடித்து விளையாடப்படும் விளையாட்டாகவே உருவானது. அதனால் உள்ளங்கையின் விளையாட்டு என்றே அழைக்கப்பட்டது. இதன் ஆர்வலராக இருந்த பிரான்சின் பத்தாம் லூயி மன்னரே பெயர் தெரிந்த முதல் டென்னிஸ் வீரர்! விளையாடுவதில் சிரமங்களிருந்ததால், அவர்தான் 13ஆம் நூற்றாண்டில் பாரிசில் உள்ளரங்கை அமைத்தார். அது மற்ற ஐரோப்பிய அரச குடும்பங்களுக்கும் பரவியது. 16ம் நூற்றாண்டில்தான் ரேக்கெட் அறிமுகமானது. பந்தைப் போடுபவர் பிடி அல்லது எடு என்ற பொருள்படும் டெனஸ் என்ற பிரெஞ்சுச் சொல்லைச் சொல்லும் வழக்கத்திலிருந்து டென்னிஸ் என்ற பெயர் உருவானது. புல்தரையில் விளையாடும் விளையாட்டென்பதால், 1830இல் உருவான புல் வெட்டும் எந்திரம்(லான் மூவர்) இந்த விளையாட்டு பரவலாக முக்கியக் காரணியானது. 1800களின் பிற்பகுதியில் உருவான நவீன டென்னிசை உருவாக்கியவராக இங்கிலாந்து ராணுவ அலுவலர் வால்டர் விங்க்ஃபீல்ட் கருதப்படுகிறார். பிரெஞ்ச், ஆஸ்திரேலிய, அமெரிக்க ஓப்பன் போட்டிகள், விம்பிள்டன் ஆகிய நான்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. 17ஆம் நூற்றாண்டில், ஒரு வகை சீட்டுக்கட்டு விளையாட்டில் ஸ்லாம் என்பது வெற்றியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விளையாட்டில், அனைத்தையும் வெல்வது க்ராண்ட்ஸ்லாம் என்றும், ஒன்றைத் தவிர அனைத்தையும் வெல்வது ஸ்லாம் அல்லது லிட்டில் ஸ்லாம் என்றும் அழைக்கப்பட்டன. பாபி ஜோன்ஸ் 1930இல் நான்கு பெரிய கோல்ஃப் போட்டிகளில் வென்றபோது க்ராண்ட் ஸ்லாம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே ஆண்டில் (மேற்குறிப்பிட்ட) நான்கு டென்னிஸ் போட்டிகளிலும் வெல்வதை க்ராண்ட் ஸ்லாம் என அழைக்கும் பழக்கம் உருவானது. இன்று, விம்பிள்டனைத்தவிர மற்ற மூன்றும் கடின தரையில்தான் விளையாடப்படுகின்றன.