மாரடைப்புக்கான மூலகாரணங்கள் யாது?
“அத்திரோஸ்லோராசில்” என்ற இரத்த நாள மாறுபாட்டின் காரணமாக கொரனரி என்ற இருதய்த தமனிகளில் ‘கொலஸ்டிரால்’ என்ற கொழுப்புப் பொருள் சிறிது சிறிதாக உட்புறச் சுவர்களில் படியும். அதனால் இருதயத் தமனிகள் நாளுக்கு நாள் குறுகலாக ஆகிவரும். இந்த மாறுபாடு சிறுகச் சிறுக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் திடீரென்று ஒரு நாள் அவை அடைத்துக் கொள்ளும். அப்பொழுது, இருதய தமணிகள் அடைத்துக் கொள்ளும் அளவு, அதனால் பாதிக்கப்பட்டு பழுதடையும் தசையின் அளவு மற்றும் பல இருதய மாறுபாடுகளை பொறுத்தே ஒருவரின் இருதயம் மறுபடி இயக்க அல்லது இயங்காது போகும் தன்மை மறுபடி அடையும். இந்த மாரடைப்பு நோயினால் அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இறப்பவர்கள் எண்ணிக்கை 13சதவீதத்திலிருந்து 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. நம் நாட்டில் “நீடித்த அஜீரணம்”, “வாயு உபத்திரவம்” என்றெல்லாம் பெயரிடப்பட்ட இந்த நோய், வளர்ந்து வரும் விஞ்ஞான அறிவால் இப்பொழுது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு குணமாக்கப்படுகிறது. என்றாலும் இப்பொழுது இந்நோய் நம்மில் அதிகம் பேரை பாதித்து அதிகமாகி வருகிறது என்னும் உண்மை தெரிய வந்துள்ளது.
மாரடைப்பு நோய் வரக் காரணம் என்ன?
இன்றைய சுற்றுப்புறச் சூழ்நிலை ஏற்படுத்தும் பாதிப்பு, விரைவு, ஓய்வு அற்ற இன்றைய வாழ்க்கைத் தொல்லைகள் போன்றவை இந்நோய் வர அடிப்படைக் காரணங்கள் எனலாம். நாகரீகம் வளர வளர, இந்த நோய் 25-30 வயது வரை உள்ள இளைஞர்களிடையே கூட முன்னைவிட அதிகம் காணப்படுகிறது. பொதுவாக 40-60 வயது உள்ளவர்களிடையேதான் இந்நோய் அதிகம் வருகிறது. பெண்களுக்கு அதிகமாக இந்த நோய் வருவதில்லை. அப்படி வந்தாலும் முதுமையடைந்து மாதவிலக்கு நின்ற பிறகே அதிக சதவிகிதத்தில் வருகின்றது.
மாரடைப்பு நோய் பரம்பரை நோயா?
ஏறத்தாழ தாய் தந்தையர்கள் இந்த நோயினால் அவதிப்பட்டவர்களாக இருந்திருப்பார்களேயானால், அவர்கள் குழந்தைகள் 30சதவீத இந்த நோயால் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய் வருவதற்கு உடல் பருமன் ஒரு காரணமாக இல்லை என்று சொல்லப்பட்டாலும், ஒல்லியாக இருப்பவருக்கும் பருமனாக இருப்பவர்க்கும் இந்நோய் வந்தால், ஒல்லியானவரே விரைவில் குணம் அடைகிறார். கொழுப்புச்சத்தை அதிகமாகத் தன் உணவில் சேர்த்துக் கொள்பவருக்கு அதன் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதால் இருதயச் சுற்றியுள்ள இரத்தக் குழாய்கள் தடித்து மாரடைப்பு வரலாம். உடலை வருத்தி வேலை செய்யும் மனிதர்களையே இந்த நோய் அதிகம் தாக்குகிறது. ஆகவே தான் நாகரிகம் வளர, வளர நவீன போக்குவரத்துச் சாதனங்கள் பெருகப் பெருக, இம்மாதிரியான நோய்கள் மனிதனைத் தாக்கும் எண்ணிக்கை சதவீதம் அதிகரித்து வருகிறது. புகை பிடிப்பதும் இருதய நோய் வரும் வாய்ப்பை அதிகமாக்கியுள்ளது. ஏமாற்றம், மனக்கவலை முதலிய காரணங்களால், சிலருக்கு மாரடைப்பு நோய் வருகிறது. மனக்கவலையின் பொழுது இருதயத்தைச் சுற்றியுள்ள இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதுடன் இரத்தத்திலுள்ள சில இரசாயனம் ஏறி இறங்கி இருதயக் குருதியுறைக்கு, அடி கோலுகின்றன. அதிக இரத்த அழுத்தமும் தனித்தனியாகவோ, இணைந்தோ, உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்பு நோய் நிச்சயமாக வரக்கூடும்.
மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் யாவை?
மாரடைப்பு நோயின் பொழுது நெஞ்சில் ஒரு வலி ஏற்படும். இவ்வலி எங்கு எப்படி உள்ளது என்று சொல்ல முடியாமல் முதலில் தவிப்பார்கள். இந்த நெஞ்சுவலி மார்பெலும்புக்குப் பின் உள்ள மார்புப் பகுதியில் முதலில் ஏற்படும். இது அதிக உழைப்பு, நியதியற்ற உணவு முறை, அதிக உணர்ச்சி ஆகியவற்றால் ஏற்படுகின்றது. வலி 5 நிமிடங்களிலிருந்து பல மணி நேரங்கள் வரை இடப்புறத் தோளுக்கும், கைக்கும் பரவி, பிறகு மேல்கழுத்து, தாடை முதலிய பாகங்களுக்கும் பரவக்கூடும். நெஞ்சு வலி ஏற்படும் பொழுது நாடித் துடிப்பு, சுவாசத் தடுமாற்றம், வியர்வை, மயக்கம் போன்ற அறிகுறிகள் வலியுடன் வரும். சில சமயம் சுரம் வரும். இரத்த அழுத்தம் குறைந்து காணப்படும். இதயத்தின் உறையில் உராய்வு இருக்கும். இருதயம் பாதிக்கப்படும். மேல்மூச்சு வரும். கை, கால்களில் வீக்கம் இருக்கும். இருதயம் அதிகமாகப் பாதிக்கப்படும் பொழுது உடல் வெளுத்து, குளிர்ந்து போய் வியர்த்து விடும். நீர் போவதும் குறையும். இருதயத் துடிப்பு மாறுபாட்டுடன் தவறித் தவறி, முறைகேடாக இயங்கும். இவ்வாறு இயங்கும் இருதயத்தின் தசைகள் வேண்டிய அளவு இரத்தத்தைப் பெறாது போவதால் அப்பகுதி மட்டும் வீங்கிப் பெருத்துவிடும். இந்நிலை அதிகமாக அதிகமாக இருதயம் வெடித்து விடக்கூடிய ஆபத்தும் வாய்ப்பும் அவசியம் ஏற்படும்.
உணவுக் கட்டுப்பாடு
இந்த வியாதி உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிப்பது அவசியம். இன்னும் சொல்லப்போனால் கட்டுப்பாட்டை விடப் பத்தியமாக இருக்க வேண்டும். உண்ணும் உணவில் (கலோரி) வெப்ப மதிப்பு 15% குறைக்கப்பட்டு உணவை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் உடலின் கொழுப்புச் சத்தான கொலஸ்ட்ராலை குறைக்க, மிருகக் கொழுப்பு, மூளை, கல்லீரல், சிறுநீரகம், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, மஞ்சள் கரு, வறுத்த மீன், இறைச்சி போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். இத்துடன் உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும். சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டு தேங்காய், கடலையெண்ணெய் வகைகளை ஒதுக்குவது நல்லது. எளிதில் செரிக்கக்கூடிய மாவுப் பொருட்களான சர்க்கரை, திராட்சை, அரிசிக் கஞ்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடல் பருமனாகும் வாய்ப்புக்களை இவ்வுணவுகள் அதிகரிக்கின்றன. கீரை வகைகள், காய்கறிகள், வெங்காயம், பூண்டு, வெள்ளைக்கரு, சிறிய மீன், வேகவைத்த நீராவியில் பக்குவப்படுத்தப்பட்ட உணவு வகைகளை இந்நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாரடைப்பு நோய் வந்து குணம் அடைந்தவர்கள் உடல் உழைப்பும், மூளை உழைப்பும் மாறி மாறி வருமாறு தங்கள் வேலைகளை அமைத்துக் கொள்வது சிறந்தது. அதிக அளவு உடற்சிரமம் தேவைப்படும் வேலைகளுக்கு இந்யோயாளிகள் செல்லலாகாது. தங்கள் உடலை வலிமையுடன் வைத்துக் கொள்வதற்காக இவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். இவைகள் போட்டி மனப்பான்மையுடன் இருக்கக்கூடாது. வாழ்வில் மன உளைச்சலைத் தவிர்த்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இவற்றுடன் மாரடைப்புக்குக் காரணங்களான நீரிழிவு, உடல்பருமன், இரத்தக்கொதிப்பு முதலிய நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிப்பது அவசியம். இந்நோய் வந்தவர்கள் வயிறு நிரம்ப உண்ணக்கூடாது. உணவு உண்ட பிறகு சுமார் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். மாடிப்படி ஏறும்பொழுது மெதுவாகவே ஏற வேண்டும்.
மாரடைப்பு நோயைத் தடுக்க முடியுமா?
மாரடைப்பு நோய்க்குச் சிறந்த சிகிச்சை, அதுவராமல் தடுப்பதுதான். இந்நோய் வராமல் தடுக்க நம்பகமான முறை எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே இருதய நோய் வரக்கூடிய சாத்தியக்கூறுகளை முன் கூட்டியே அறிந்து கொள்வதோடு, தகுந்த சிகிச்சை மூலம் நோயை முற்றவிடாமல் தடுத்துக் கொள்வதும் அவசியம். ஒருவருடைய இரத்தத்தில் கொலஸ்டிரல், டிரைகிளிசரைட்ஸ் என்ற இரு கொழுப்புப் பொருட்கள் மிக உயர்ந்த அளவில் இருந்தால், அந்த நபருக்கு மற்றவர்களை விட இருதய நோய் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்விரு கொழுப்பு பொருள்களையும் எளிதில் பரிசோதனை செய்து இருபது நிமிடங்களில் அறிந்து கொள்ள முடியும். இரத்தத்தில் இந்தக் கொழுப்புப் பொருட்கள் அதிகரிக்கா வண்ணம் கொழுப்புச் சத்து குறைந்த உணவை அருந்தி வந்தால் நல்ல பயனைத் தரும். மாரடைப்பு நோயைத் தடுக்கவும் உதவுகிறது. ஆகவே நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மாரடைப்பு வந்துவிட்டதோ என்று வீண் பீதியடையாமல், மனக்கவலை கொண்டுவிடாமல் மருத்துவரின் துணை கொண்டு ஆய்வு செய்து, வளர்ந்துள்ள மருத்துவ உதவியினால் தக்க மருத்துவம் பெற்று நீண்ட நாள் வாழ முயலுங்கள்.
தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1