உன்மொழி நன்மொழி உவகை தரும்மொழி
உலக மொழிகளில் உயர்மொழி செம்மொழி!
எண்ணரும் மொழிகளைக் கற்றிட்ட பாரதி
ஏற்ற இன்மொழி தமிழ்மொழி மட்டுமே!
சங்க இலக்கிய வளம்மிக நிறைந்தது
சாற்றிடும் பாட்டும் தொகையும் உடையது !
பொங்கும் பதினெண் கீழ்க்கணக் குள்ளது!
போற்றும் சிற்றி லக்கியம் நிறைந்தது
ஐம்பெருங் காப்பிய அழகியல் நிறைந்தது
ஐஞ்சிறு காப்பியம் அதனையும் கொண்டது
செம்மை இலக்கணச் செழிப்பில் மலர்ந்தது
சேர்ந்திடும் சொல்வளச் சோலை விரிந்தது
ஓங்கும் பதினெண் திருமுறை கண்டது
ஓதிடும் தேவார திருவாசகம் கொண்டது!
மங்கா பிரபந்த வகையில் உயர்ந்தது!
மாகடல் பரப்பின் அளவினும் சிறந்தது!
கட்டுரை சிறுகதைப் புதினம் என்றே
கவிதை பலப்பல வகையில் கண்டது!
கொட்டும் அருவியாய் இலக்கியம் கொண்டது
குவலயம் வாழ்ந்திட அகம்புறம் வகுத்தது!
ஒருமொழி அழிந்திடின் ஒழிந்திடும் அதனினம்
ஓங்கிட அம்மொழி உயர்ந்திடும் அவ்வினம்!
அருமொழி தன்னில் அயல்மொழி சேர்த்தால்
அழிந்திடும் அதன்வளம் ஆகையால் தவிர்த்திடு!
தமிழனின் வரலாறு தமிழக அகழாய்வு
தனிப்பெரும் காலத்துப் பண்பாட்டு நிகழாய்வு!
அமிழ்தின் இனிய தமிழின் உயர்வே
அதனைப் பேசுவோர் அடைந்திடும் உயர்வு!