விருதுநகர், ஜன.2- ஒன்றிய அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைக் கொண்டு வருவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறயது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். விருதுநகரில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டப் பட்டாசுத் தொழிலாளர்களின் நிலைமை மிகமிக பரிதாபகரமாக உள்ளது. இத்தொழில் அழியும் நிலையில் உள்ளது. பட்டாசுத் தொழில் மீதான ஒன்றிய அரசின் பார்வை மாற வேண்டும். அதற்கு பிரதமரின் வருகை உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பட்டாசுத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்களை அவசியம் பிரதமர் சந்திக்க வேண்டும். மதுரை மாவட்டம் தோப்பூரில் அறிவிக்கப்பட்ட எம்ய்ஸை பொறுத்தவரையில் 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. எப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை வேலைகள் முடியும் எனக் கேட்டால், 2026 இல் முடியுமென பதில் கூறுகின்றனர். ஜப்பான் அரசின் கடன் உதவியால் பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே, எம்ய்ஸ் பற்றிய கேள்வியை ஜப்பான் பிரதமரிடமா கேட்க முடியும்?. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம். ஒன்றிய அரசின் பார்வையே, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்ப்பதுதான். இந்தப் பார்வை மோடி வருகையால் மாறவேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.