tamilnadu

img

சுயநல அரசியலுக்கு முடிவுரை எழுதுவார்களா அதிமுக தொண்டர்கள்? - கே.பாலகிருஷ்ணன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தற்போது வரலாறு காணாத அதிகாரப் போட்டிகளுக்குள் மூழ்கிப் போயிருக்கிறது. அதன் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை சீல் வைக்கும்  அளவுக்கு உட்கட்சி சண்டை முற்றி வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளராக முடிசூட்டியுள்ள பொதுக்குழு, ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரின் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியையும், கே.பி.முனுசாமியையும் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார். இதற்கிடையில், நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கு இருப்பதால், நடந்திருக்கும் எதுவுமே  செல்லாது என்று வி.கே.சசிகலாவும் ஊடகங்களிடம் பேட்டி கொடுத்திருக்கிறார்.  நீண்ட காலத்திற்கு தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தற்போதும் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது. எனவே, அந்த கட்சியின் உட்கட்சி பிரச்சனை, தமிழ்நாட்டின் அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு பின் காலமானார். அவரின் மரணச்செய்தி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழ்நாட்டு அரசியலில் அதிமுகவை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகள் தொடங்கிவிட்டன.    முதலில் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்தார். நிர்ப்பந்தத்திலேயே தான் ராஜினாமா செய்ததாக வெளிப்படுத்திவிட்டு பின் தொடர்ந்து தர்மயுத்தம் என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூடி வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. அவரையே முதலமைச்சராகவும் ஆக்கப்போகிறோம் என்றார்கள். ஆனால் ஆளுநர் அந்த முடிவை தாமதப்படுத்தினார். இந்த தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூவத்தூர் நாடகமும் அருவருப்பான விவாதத்தை தூண்டுவதாக அமைந்தன. பிறகுதான் எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்டார். அத்துடன் காட்சிகள் முடிந்துவிடவில்லை.

தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் 

ஒ.பன்னீர் செல்வம், அதிமுகவிற்கு திரும்பி கட்சியின் ஒருங்கிணைப்பாள ரானார். சிறைக்குச் சென்ற சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்கு நடுவில்தான் கட்டுக்கட்டாக பணம் புழங்கிய ஆர்.கே.நகர் தேர்தலும் நடந்து முடிந்தது.    அதிமுக ஆட்சி காலத்தில், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்திற்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவமும், கொடநாடு கொலை வழக்கும், அதே போல ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லி அதனை  விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையமும் மூடுமந்திரங்களாக உருவெடுத்தன. மேற்கண்ட நிகழ்வுகள் தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. இருப்பினும் கடந்த சில  மாதங்களாக அதிமுகவிற்குள் அனைத்தும் சுமூகமாகிவிட்டது போன்ற ஒரு  தோற்றம் இருந்துவந்தது. பெரும்பாலும் சச்சரவுகள் இல்லாமல் ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும், இதர பதவிகளுக்குமான உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்தது. ஆனால் இந்த சுமூக நிலைமை என்பதே வெறும் வெளித்தோற்றம்தான் என அம்பலமாகியுள்ளது.

பாஜகவின் கைங்கர்யம் 

தற்போதைய ‘ஒற்றை தலைமை’ சர்ச்சையை ஒட்டி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஊடகங்களில் பேசினார். அப்போது பழைய நிகழ்வுகளையும், தர்ம யுத்தம் பற்றியும் பேசிய அவர் ‘பிரதமர் ஆலோசனை யின் பேரில்தான் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டேன்’ என்ற உண்மையை வெளிப் படுத்தினார். இதன் மூலம் தமிழ்நாட்டின் ஆட்சியிலும், அதிமுகவின் உள் விவகாரங்களிலும் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பாஜகவின் கைங்கர்யமும் இருக்கிறது என்ற நீண்டநாள் குற்றச்சாட்டினை அம்பலப்படுத்தினார். புதிய சர்ச்சைகளின் மூலமாக மீண்டும் ஊடகங்களில் அதிமுக உட்கட்சி மோதல் வியாபித்தது. பொதுக்குழு நடத்தலாமா? என்ன தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்? என்ற கேள்விகள் பொதுவெளிக்கு வந்ததுடன், நீதிமன்றங்களும் கூட இந்த விசயத்தில் தலையிட்டு மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தின.   

தமிழ்நாட்டு நலன் அல்ல!

கட்சியின் உள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்றது உச்ச நீதிமன்றம். ஆனால் அதே சமயத்தில் கூட்டம் நடத்தலாம், கூடாது என்று முரண்பட்ட பல்வேறு தீர்ப்புகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டார்கள். அதிமுகவின் உட்கட்சி குழப்பங்கள், நீதிமன்றத்தையும் குழப்பிவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு நாடகங்கள் உச்சத்தை எட்டின. இந்த அதிகாரப்போட்டி, முழுக்க முழுக்க சுயநலத்தில் இருந்து வெளிப்படுவதே ஆகும். ஒற்றைத் தலைமை என்றால் ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது; இரட்டைத் தலைமை என்றால் இரண்டுபேரும் தங்கள் சொந்த நலன்களை பாது காத்துக்கொள்வது என்பதுதான் அதன் பொருள்; தமிழ்நாட்டு நலன் அல்ல!   தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அலுவலகத்தில் முடக்கப்பட்டுள்ளனவே, அதுபற்றி அதிமுகவின் நிலைபாடு என்ன? அதன் தலைமைக்கான போட்டியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கோ, ஓ.பன்னீர் செல்வத்திற்கோ அல்லது வி.கே.சசிகலாவிற்கோ இந்த விசயத்தில் என்ன கருத்து இருக்கிறது?

தமிழ்நாட்டின் எதிர்க் கட்சி தாங்கள்தான் என்று விளம்பரங்களின் மூலம் தம்பட்டம் அடித்து வருகிறது பாஜக. அங்கிருந்து எழக்கூடிய பல்வேறு கருத்துக்கள் மிக மிக ஆபத்தாக இருக்கின்றன. மாநிலத்தையே துண்டாக சிதறடிக்கும் அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று பேசினார்    பாஜகவின் சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன். கடுமையான கண்டனங்கள் எழுந்த பிறகும் தன்னுடைய கருத்தினை திரும்பப்பெறவில்லை. ஏற்கனவே அவர்கள் ‘கொங்குநாடு’ என்று சர்ச்சையை உருவாக்கி அதனை ‘தினமலர்’ நாளிதழை பயன்படுத்தி தொடர்ந்து ஊதிப் பெரிதாக்கினார்கள்.  அண்ணாவின் பெயரை தன்னுடைய கட்சி யின் பெயரிலேயே வைத்திருக்கும் அதி முக இந்த பிரச்சனையில் என்ன செய்தது?  ‘தமிழ்நாடு’ உருவாக்கத்தின் பின்னணி யாக அமைந்த ஏராளமான போராட்டங்க ளைப் பற்றியும் உயிர்த்தியாகங்கள் பற்றி யும் அதிமுக தலைவர்களுக்கு கொஞ்ச மேனும் கவலை இருக்கிறதா?

மக்களுக்காக துடிக்கவில்லை

மோடி அரசாங்கம் பின்பற்றும் கொள்  கைகளால் தமிழகத்தின் ஜவுளி ஆலைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜவுளி சார்ந்த தொழில் கள் நெருக்கடியில் உள்ளன. கச்சா பொருட் களின் விலையேற்றத்தால் பட்டாசு, காகி தம் மற்றும் அச்சு துறைகள் பாதிக்கப்  பட்டுள்ளன. விவசாயம் நெருக்கடியில் தொடர்கிறது. வங்கிக் கடன்களுக்கு வட்டி  அதிகரிக்கிறது. கந்துவட்டி உள்ளிட்ட கொடுமைகளும் பெருகுகின்றன. பெட்  ரோல், டீசல் விலை உயர்வும், சிலிண்டர்  விலை உயர்வும் மக்களை வாட்டு கின்றன. டாலர் மதிப்பு தொடர்ந்து சரி வதால், நெருக்கடி நிலைமை புதிய உச்  சத்தை எட்டும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. படித்த இளைஞர்களை அதிகம்  கொண்ட தமிழ்நாட்டை வேலைவாய்ப்பு நெருக்கடி தாக்குகிறது. அரசுத்துறைகள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு, கிடைத்து வந்த  கொஞ்ச நஞ்ச வேலை வாய்ப்புக்களை யும், இட ஒதுக்கீட்டையும் காலிசெய்திருக் கிறது. இப்படியே போனால், இலங்கை யை போன்ற நெருக்கடி நிலைமைதான் இந்தியாவிலும் ஏற்படும். ஆனால் அதிமுக தலைவர்களுக்கு இந்த நிகழ்ச்சிப் போக்கு கள் எதைப் பற்றியுமே கவலை இல்லை. மக் களுக்காக அவர்கள் துடிப்பதும் இல்லை. 

ஊழல் சொத்தைப் பாதுகாக்க...

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல் வம், சசிகலா என 3 முனையாக மோதிக் கொண்டாலும், பாஜகவை ஆதரிப்பதில் இவர்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. ஒருவரையொருவர் காலை வாருவதில் குறியாக இருந்தாலும் பாஜகவின் காலில்  விழுவதில் ஒற்றுமையாகவே இருக்கிறார்  கள். பாஜக தமிழகத்தை ஆக்கிரமித்து நாசம் செய்ய துடிப்பது குறித்து இவர்க ளுக்கு கவலையில்லை. பாஜக துணை யுடன் கட்சி அதிகாரத்தை பிடிப்பது யார் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள். இதனா லும் பயந்து பாஜகவை எதிர்க்க தயங்கு கிறார்கள். தமிழ்நாட்டை பாதுகாப்பதை விட ஊழல் செய்து சேர்த்த சொத்தை பாது காப்பதிலேயே கவனமாக இருக்கிறார் கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் ஆகும். அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., பல முற்போக்கான கருத்துக்  களை மக்களிடம் எடுத்துச் சென்ற சினி மாக்களின் வழியாக அபிமானத்தை வளர்த்துக்கொண்டவர். அதன் தொடர்ச்சி யாக செல்வி ஜெயலலிதா அதிமுகவுக்கு  தலைமை தாங்கினார். அண்ணாவின் பெயரால் அந்த இயக்கம் தொடங்கப் பட்டது. அதிமுகவில் இணைந்த ஆயிரம்  ஆயிரம் தொண்டர்களும் இந்த தலை வர்களை தொடர்ந்து வெற்றிபெற வைத் தார்கள். அந்த ஈர்ப்பு மட்டுமே ஒரு இயக்  கத்திற்கு போதுமானதா? தமிழ்நாட்டின்  நலன்களை மொத்தமாக கைவிட்டுவிட்டு, சுயநல பதவிச் சண்டைகளை வேடிக்கை  பார்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக் கும் பரிதாப நிலைமை பற்றி அதிமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். அந்த  சிந்தனையே சுயநல அரசியலுக்கு முடி வுரை எழுதும்.