உள்ளாட்சி ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர அமர்வுப் படி கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான், முதன்முதலாக வழங்கப்பட்டது. அதன்பிறகு, பல ஆண்டுகளாக உயர்த்தப் படாமல் இருந்த இந்த அமர்வுப் படியினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும். கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப் படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி தரப்படும. இதன் மூலம் தமிழகத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 19 ஆயிரம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பயன் பெறுவார்கள்.
ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார்
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தப்படக்கூடிய பல்வேறு திட்டப் பணிகளைக் கண்காணிக்க முதன் முறையாக 2008 ஆம் ஆண்டில் 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, ஏறத்தாழ 13 ஆண்டு காலமாக புதிய வாகனங்கள் வழங்கப்படாத சூழல் உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும். சிறந்த ஊராட்சிக்கு ரூ.10 லட்சம்! கிராம ஊராட்சித் தலைவர்களின் தலை மைப் பண்பினை வெளிக் கொண்டுவரும் வகையிலும், ஊராட்சிகi சிறப்பாக நிர்வவிக்கும் தலைவர்களுக்கு “உத்தமர் காந்தி”என்ற விருது 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டது. எனவே, இந்த ஆண்டு முதல் அந்த விருது மீண்டும் வழங்கப்படும். ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும். உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத் துடன், மக்களாட்சியின் மாண்பினை கிராம அளவில் உறுதி செய்ய ஏதுவாக, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற முக்கிய துறைகளின்மூலம் செயல்படுத்தப்படக் கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து சிறந்த முறையில் செயல்படுத்த 600 ஊராட்சிகளில் “கிராமச் செயலகங்கள்”இந்த ஆண்டே கட்டப்படும். இந்த கிராமச் செயலகங்கள் ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்துத் துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சிச் செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். (ஊரக உள்ளாட்சிகள் குறித்து சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திலிருந்து)