நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே கரையிருப்பில் பிறந்து வளர்ந்த தோழன் அசோக் தனது ஆரம்பகல்வியை தனது சொந்த கிராமமான கரையிருப்பில் பயின்றாலும் மேல்நிலை கல்வியை நெல்லை மாநகரின் இதயப்பகுதியான சந்திப்பு பகுதியில் “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எனப் பாடிய முண்டாசுக்கவிஞன் பாரதி படித்த அதே இந்துக் கல்லூரி பள்ளியிலேயே பயின்றான்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துடிப்புமிக்க ஊழியரான அசோக், மக்களை நேசிப்பவன். ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்த தோழன். அதனால்தான் அசோக்கை எப்போது எங்கே பார்த்தாலும் அவனுடன் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும் என்று எல்லோரும் சொல்வார்கள். சேகுவேரா, பகத்சிங், கரிபால்டி என வரலாற்று ஆளுமைகளில் தொடங்கிய அவனது வாசிப்பு பயணம் பெரியார், மகாத்மா ஜோதிபாபூலே, அய்யன்காளி, முத்துகுட்டி சாமிகள் என்ற சீர்திருத்த வாதிகளின் வரலாற்றையும் கற்க வைத்தது. அது அண்ணல் அம்பேத்கர், மார்க்ஸ், லெனின், கிராம்சி என விரிவடைந்தது. அதுபோலவே வாலிபர் சங்கத்திலும் மேலும் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஒரு தலைவனாக வளர்ந்தான் தோழன் அசோக்.
தமது உயிருக்கு சாதி ஆதிக்கவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று அறிந்த பின்னரும் அச்சமின்றி தனது இயக்கப்பணிகளை முன்னெடுத்த அசோக்கின் இறுதி நம்பிக்கை எதுவாக இருந்திருக்கும்? அவன் தனது சகோதரன் சதீஷ் மற்றும் தோழர்களிடம் சொன்ன வார்த்தைகள் இவைதான்: “எதிரிகள் என்னை கொன்றுவிடலாம், ஆனாலும் நமது இளைஞர்களின் கல்வி கனவோ மக்களின் முன்னேற்றமோ தடைபடக்கூடாது” என்பதுதான். ஆம் அசோக் ஒரு மாவீரன், சிறந்த போராளி, சிறந்த மனித நேயன். “சாதியத்திற்கும் மதவாதத்திற்கும் மாற்றான மனிதநேயமே நாங்கள் -தோழர்கள்” என்று முழங்கியவன். தோழர் அசோக்கின் வழியில் அவர் விட்டுசென்ற பணியை முன்னெடுப்போம்..